Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாட்டை கொன்று கடித்து தின்ற மர்ம விலங்கு இடைப்பாடி அருகே சிறுத்தை நடமாட்டமா?

மாட்டை கொன்று கடித்து தின்ற மர்ம விலங்கு இடைப்பாடி அருகே சிறுத்தை நடமாட்டமா?

மாட்டை கொன்று கடித்து தின்ற மர்ம விலங்கு இடைப்பாடி அருகே சிறுத்தை நடமாட்டமா?

மாட்டை கொன்று கடித்து தின்ற மர்ம விலங்கு இடைப்பாடி அருகே சிறுத்தை நடமாட்டமா?

ADDED : ஜூலை 10, 2024 09:24 PM


Google News
இடைப்பாடி:கோம்பைக்காட்டில் மாட்டை கொன்று தின்ற மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என கருதி, 13 கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா ஆனைப்பள்ளத்தை சேர்ந்த விவசாயி வீரப்பன், 51. இவரது ஆட்டை, கடந்த மாதம், 6 இரவு, மர்ம விலங்கு கடித்து கொன்று சிறிது துாரம் இழுத்துச்சென்றது. ஆட்டை இழுத்துச்சென்ற விலங்கின் காலடி தடம், சிறுத்தையுடன் ஒத்துப்போவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். அப்போது மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மேட்டூர் வனத்துறையினர், பூலாம்பட்டி போலீசார் ஆகியோர், பக்கநாடு, ஆடையூர், ஆனைப்பள்ளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆனைப்பள்ளம் வனப்பகுதியில், 13 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால் விலங்கின் நடமாட்டம் எதுவும் இல்லாததால், 15 நாட்களுக்கு பின், அனைத்து கேமராக்களையும் வனத்துறையினரே கழற்றி எடுத்துச்சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அருகே உள்ள கோம்பைக்காட்டில் விவசாயி மாதையனுக்கு சொந்தமான மாட்டை மர்ம விலங்கு கொன்று, அதன் ஒரு பகுதியை தின்றுவிட்டு சென்றுள்ளது. நேற்று காலை, மாதையனின் மனைவி ஆராயி, மாட்டை காணவில்லை என தேடியபோது வனப்பகுதி ஓரத்தில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மாட்டின் பின்புற காலில் ஒரு பகுதியை தின்ற மர்ம விலங்கு, மீதியை அப்படியே விட்டு சென்றுள்ளது. மாட்டின் கழுத்து, தொடை, உடலின் பல இடங்களில் நக கீறல்கள் உள்ளன.

இதுகுறித்து மேட்டூர் வனச்சரகர் ஜீவானந்தம், வனவர் ஜெயக்குமார், வன காப்பாளர்கள் மதிவாணன், சந்திரன், பக்கநாடு கால்நடை மருத்துவர் ராஜேஷ், வி.ஏ.ஓ., செல்லதுரை ஆகியோர், ஆடையூர், ஆனைப்பள்ளம், கோம்பைக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

குறிப்பாக கோம்பைக்காடு வனப்பகுதியில் மாடு இறந்து கிடந்த இடத்தை சுற்றி, இரண்டு, 'சிசிடிவி' கேமராக்கள், மர்ம விலங்கு வந்து சென்ற காலடி தடம், சுற்றுப்பகுதிகளில், 11 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிக்கின்றனர். அந்த விலங்கின் காலடி தடம், சிறுத்தையின் கால் தடமாக இருக்கலாம் என சந்தேகித்து வனத்துறையினர் தேடிவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us