Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மகளிரணிக்கு போலீசார் மிரட்டல்போராட்டத்தை வாபஸ் பெற்ற பா.ஜ.,

மகளிரணிக்கு போலீசார் மிரட்டல்போராட்டத்தை வாபஸ் பெற்ற பா.ஜ.,

மகளிரணிக்கு போலீசார் மிரட்டல்போராட்டத்தை வாபஸ் பெற்ற பா.ஜ.,

மகளிரணிக்கு போலீசார் மிரட்டல்போராட்டத்தை வாபஸ் பெற்ற பா.ஜ.,

ADDED : மார் 22, 2025 01:34 AM


Google News
மகளிரணிக்கு போலீசார் மிரட்டல்போராட்டத்தை வாபஸ் பெற்ற பா.ஜ.,

ராசிபுரம்:ராசிபுரம் டாஸ்மாக் மதுபான கடை சுவரில், தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட வந்த, பா.ஜ., மகளிரணியினரை, போலீசார் மிரட்டியதால் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில், சோதனையிட்ட அமலாக்கத்துறையினர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும், அதற்கான ஆவணங்கள் கைப்பற்றி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை, கடந்த, 17ல் முற்றுகையிட சென்ற, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

அதை கண்டித்து, நேற்று ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபான கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டப்போவதாக, ராசிபுரம் நகர, பா.ஜ., மகளிரணியினர் அறிவித்திருந்தனர். இதற்காக, நேற்று மதியம், 12:30 மணிக்கு மகளிரணியை சேர்ந்த மகேஸ்வரி, துர்காதேவி உள்ளிட்டோர், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தனர். அங்கு வந்த ராசிபுரம் போலீசார், 'நேற்று வரை வழக்கு மட்டும் தான் போடச்சொல்லியிருந்தனர். ஆனால், இன்று கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர். வண்டியும் வந்துவிட்டது. இன்று கைது செய்தால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் ஜெயிலுக்குள் தான் இருக்க வேண்டும். பெயில் எடுக்க முடியாது' என, அச்சுறுத்தும் வகையில் மிரட்டினர். இதைக்கேட்ட, பா.ஜ., மகளிரணியினர், 'போலீசார் கண்டிப்பாக இன்று கைது செய்து விடுவார்கள்' என, புலம்பியபடி போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us