ADDED : ஜன 02, 2024 11:30 PM

திருவாடானை:ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணியர் குவிந்தனர். படகு சவாரி சென்று மாங்ரோவ் காடுகளை ரசித்தனர்.
காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கியது. இயற்கை தந்த கொடையாக அனைவரது மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலாதலமாக அறிவிக்கப்பட்டதால் பல பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணியர் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணியரை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலையாத்தி காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணியர் தொண்டி வழியாக காரங்காடு சென்று அங்கு சதுப்பு நிலக்காடுகளையும், பறவைகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
வடகிழக்கு பருவமழையால் சில நாட்களாக சுற்றுலா பயணியர் வரத்து குறைவாக இருந்தது.
இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையால் வெளிமாவட்ட சுற்றுலாப்பயணியர் நேற்று முன் தினம் குவிந்தனர்.
படகில் பாதுகாப்பு கவச உடையுடன் சென்று மகிழ்ந்தனர்.