Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்

ADDED : ஜன 11, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
-ராமநாதபுரம், : ராமநாதபுரம், பரமக்குடியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சி.ஐ.டி.யு., வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பரமக்குடியில் 60 பேரும் ராமநாதபுரத்தில் 21 பேரும் என 81 பேர் கைது செய்யப்பட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நேற்று அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ராமநாதபுரம் புறநகர் கிளை பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் ரத்தினம், சகாததேவன், சி.ஐ.டியு., மாவட்ட நிர்வாகிகள் வி.பாஸ்கரன், ஆர்.குருவேல், ஓய்வு பெற்றோர் அமைப்பு மணிக்கண்ணு, அண்ணா தொழிற்சங்க மத்திய நிர்வாகி சந்திரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறியல்


சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மறியலுக்கு போலீசார் அனுமதிக்காத நிலையில் எப்படி கைது செய்யலாம் என தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர். 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

-----பரமக்குடியில் கைது 60

பரமக்குடியில் 385 ஊழியர்களில் w60 பேர் வரை மட்டுமே பணிக்கு சென்றனர். நேற்று கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை முறையாக இயக்க முடியாததால் பஸ் ஸ்டாண்டில் நாள் முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் ராஜன் தலைமையில் தொழிற்சங்கங்களை சேர்ந்த 25 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 35 ஓய்வு பெற்றோர் பஸ் ஸ்டாண்டில் மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 60 பேரை பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us