Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காப்பீட்டு திட்ட முகாமில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் மீண்டும் நடத்த கோரிக்கை

காப்பீட்டு திட்ட முகாமில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் மீண்டும் நடத்த கோரிக்கை

காப்பீட்டு திட்ட முகாமில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் மீண்டும் நடத்த கோரிக்கை

காப்பீட்டு திட்ட முகாமில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் மீண்டும் நடத்த கோரிக்கை

ADDED : ஜூன் 26, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
திருவாடானை: முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதில் மக்கள் ஆர்வமாக ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பதிய முடியாமல் விடுபட்டதால் மீண்டும் முகாம் நடத்த வலியுறுத்தினர்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவ காப்பீடு எடுக்கும் வசதி இல்லாத ஏழை மக்களுக்காக அறிமுகபடுத்தப்பட்டதே முதல்வர் காப்பீட்டு திட்டம்.

இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கட்டணம் இல்லாமல் உயர் சிகிச்சை பெற முடியும்.

அதற்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்து காப்பீட்டு திட்ட அட்டை பெற்றிருக்க வேண்டும்.

திருவாடானை தாலுகாவில் இத் திட்டத்தில் சேர்வதற்கு பதிவு செய்யும் முகாம் ஜூன் 18ல் துவங்கி நேற்று முடிந்தது.

18ல் மச்சூரிலும், 19ல் நம்புதாளையிலும், 20ல் ஓரியூரிலும், 21ல் புதுப்பட்டினத்திலும், 24ல் திருவாடானையிலும், நேற்று தொண்டியிலும் நடந்தது.

ஊராட்சி அலுவலகங்களில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இம் முகாமில் பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் ஏராளமானோர் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்ததால் மீண்டும் முகாம் நடத்த வலியுறுத்தினர்.

திருவாடானை மேலரதவீதி மக்கள் கூறியதாவது:

இத்திட்டத்தில் அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டதால் மக்களிடம் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இம்முகாமில் ஏராளமானோர் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காலை 10:00 முதல் மாலை 5:00 வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மாலை 4:00 மணிக்கு மேல் பதிவு செய்ய முடியாது என அலுவலர்கள் தெரிவித்ததால் சில முகாம்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெரும்பாலோர் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினர்.

மேலும் வெளியூரில் வசிப்பவர்களும் இம் முகாமில் பதிவு செய்ய முடியவில்லை. எனவே மீண்டும் திருவாடானை தாலுகாவில் முகாம் நடத்த வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us