ADDED : ஜன 07, 2024 04:11 AM
தொண்டி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தொண்டி பஸ்ஸ்டாண்டில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் போதையில் தள்ளாடியவரை பிடித்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொண்டி பஸ்ஸ்டாண்டில் இருந்து சிதம்பரம், நாகர்கோவில், திருச்செந்துார், ராமேஸ்வரம், மதுரை போன்ற நீண்ட துார பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவில் கடைசி பஸ்சுக்காக பஸ்ஸ்டாண்டிற்கு பெண்கள் கைக்குழந்தையுடன் செல்கின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும் போது குடிமகன் தொல்லை அதிகரித்தது. பயணிகள் கூறியதாவது:
இரவு 9:00 மணிக்கு மேல் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும். கடைசி நேர பஸ்சுக்காக காத்திருக்கும் போது போதையில் சிலர் வம்பிழுக்கின்றனர். போதையில் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டு கட்டிப்புரண்டு சண்டையிடுகின்றனர்.அவர்களின் நடவடிக்கைகளை பார்க்க சகிக்கவில்லை.
பஸ்சுக்காக காத்திருப்பவர்களிடம் எந்த ஊருக்கு செல்கிறீர்கள். எதற்காக செல்கிறீர்கள் என்ற தேவையில்லாத கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். ரோந்து செல்லும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத 30 வயதுள்ள ஒருவர் போதையில் உளறிக்கொண்டு பயணிகளிடம் பிரச்னை செய்து கொண்டிருந்தார்.
அவரை பிடித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போதை தெளிந்தபின் காப்பகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.