/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பலத்த காற்று வீசினால் மின் வயர்களில் விழும் மரங்களால் அடிக்கடி மின்தடை பலத்த காற்று வீசினால் மின் வயர்களில் விழும் மரங்களால் அடிக்கடி மின்தடை
பலத்த காற்று வீசினால் மின் வயர்களில் விழும் மரங்களால் அடிக்கடி மின்தடை
பலத்த காற்று வீசினால் மின் வயர்களில் விழும் மரங்களால் அடிக்கடி மின்தடை
பலத்த காற்று வீசினால் மின் வயர்களில் விழும் மரங்களால் அடிக்கடி மின்தடை
ADDED : மே 27, 2025 10:09 PM
திருவாடானை : சாலையோரங்களில் உள்ள மரங்கள் பலத்த காற்றுக்கு மின்கம்பிகள் மீது விழுவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் மின்வாரியத்தினர் அவதிப்படுகின்றனர்.திருவாடானை, தொண்டி பகுதியில் சாலையோரங்களில் பழமையான மரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த மரக்கிளைகள் காற்றில் முறிந்து மின்வயர்கள் மீது விழுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் மரங்களை வெட்டுவதற்கும், அவற்றை அப்புறபடுத்துவதற்கும் முடியாமல் தவிக்கின்றனர்.
பச்சை மரங்களாக இருந்தாலும் பலத்த காற்றுக்கும், மழைக்கும் கீழே விழுகின்றன. மின்வாரிய ஊழியர்கள் சென்று குடியிருப்புகளுக்கு அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அல்லது வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து, மரங்களை அகற்றிவிட்டு மின் இணைப்பு வழங்குகின்றனர்.
மின்வாரியத்தில் இது போன்ற அவசர காலங்களில் மரங்களை வெட்டி அப்புறபடுத்துவதற்காக தொழிலாளர்கள் இல்லை. இதனால் கிராமங்களில் நீண்ட நேரம் மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின்வயர்கள் மீது மரங்கள் சாய்வதால் மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கிறது.
மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், மின்வயர்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டுகிறோம். இதற்காக தனி கூலி ஆட்கள் இல்லாததால் நாங்களே வெட்டுகிறோம். பெரிய மரங்கள் விழுந்தால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிப்போம். சிறிய மரங்கள் விழுந்தால் பொதுமக்கள் உதவியை நாடுகிறோம் என்றனர்.
நேற்று முன்தினம் ஊரணிக்கோட்டை- மங்களக்குடி ரோட்டில் மின்கம்பி மீது பனைமரம் விழுந்து ரோட்டில் சாய்ந்ததால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.