/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பயங்கரவாதி ஆதரவாளர்கள் மீதான வழக்கு முன்னாள் கலெக்டர் சாட்சியம் பயங்கரவாதி ஆதரவாளர்கள் மீதான வழக்கு முன்னாள் கலெக்டர் சாட்சியம்
பயங்கரவாதி ஆதரவாளர்கள் மீதான வழக்கு முன்னாள் கலெக்டர் சாட்சியம்
பயங்கரவாதி ஆதரவாளர்கள் மீதான வழக்கு முன்னாள் கலெக்டர் சாட்சியம்
பயங்கரவாதி ஆதரவாளர்கள் மீதான வழக்கு முன்னாள் கலெக்டர் சாட்சியம்
ADDED : ஜூன் 04, 2025 02:44 AM

ராமநாதபுரம்,:இந்திய ராணுவ ரகசியங்களை திருட பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த மலேசிய நாட்டை சேர்ந்தவர் மீதான வழக்கில் முன்னாள் கலெக்டர் விஷ்ணுசந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் மேற்கு தெருவை சேர்ந்தவர் சித்திக் கலைஹா 52. இவரது அக்காள் கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல் ரஷீத் 58. இவர் மலேசியாவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் வேலை பார்த்த கொழும்புவை சேர்ந்த முகமது யாசீர் 40, இவரது மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
இவர்களை சித்திக் கலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்க வைத்திருந்தனர். முகமதுயாசீர் தம்பி என்றும், பாரிகா ரிஸ்மியா மருமகள் என்றும் கூறி தனது ரேஷன் கார்டில் பெயர்களை சேர்த்துள்ளார்.
இவர்களுக்கு ஆதார் கார்டு பெற்று தந்துள்ளார். இந்த போலி ஆதார் கார்டு மூலம் இரண்டு ஜியோ சிம்கார்டுகளை முகமது யாசிர் பெற்று பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவி என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமான ஆர்மி பப்ளிக் ஸ்கூல் என்ற லோகோவை பயன்படுத்தி ராணுவ அதிகாரிகளின் அலைபேசிக்கு மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளார்.
கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்திக் கலைஹாவை கைது செய்தனர். நான்கு பேரும் ஜாமினில் வெளியே உள்ளனர். முகமது மிப்லால் மவுலவி தலைமறைவாகிவிட்டார்.
அப்துல்ரஷீத் மீது பாஸ்போர்ட் சட்டப்பிரிவின் கீழ் வழக்கை நடத்த கியூ பிரிவு போலீசார் அப்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் அனுமதி பெற்றிருந்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில் பாரிகா ரிஸ்மியா மட்டும் ஆஜரானார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. விஷ்ணுசந்திரன் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தார். சாட்சியத்தை அரசு மாவட்ட தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் பதிவு செய்தார். வழக்கை ஜூன் 9க்கு நீதிபதி மெஹபூப் அலிகான் தள்ளி வைத்தார்.