ADDED : ஜூன் 04, 2024 06:00 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான இருதயபுரம், மங்கலம், நெடும்புலிக்கோட்டை, செங்குடி, எட்டியத்திடல், புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் பருத்தி சாகுபடி நடக்கிறது. கடந்த சில மாதங்களாக மழையின்றி வறட்சியின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பருத்தி செடிகள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகி வந்தன. இதனால் பருத்தி மகசூல், மே கடைசி வாரத்துடன் முடிவடையும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த சாரல் மழை பருத்திச் செடிகளுக்கு ஏற்றதாக அமைந்தது. கருகிய பருத்திச் செடிகள்மழையால் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளன. இதனால், பருத்தி செடிகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு மகசூல் கொடுக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.