ADDED : ஜூன் 18, 2024 05:26 AM

திருவாடானை, : தொடர் விடுமுறையால் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காட்டில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர்.
காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவரது மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான பயணிகள் வருகின்றனர்.
இவர்களை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்புச் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலையாத்தி காடுகளுக்கு நடுவில் செல்லும் போது ஏராளமான பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமானோர் வருவர். நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு படகு சவாரி செய்தனர்.