/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மது அருந்தியவரை கண்டறிய கருவி வேண்டும்: போலீசார் எதிர்பார்ப்பு மது அருந்தியவரை கண்டறிய கருவி வேண்டும்: போலீசார் எதிர்பார்ப்பு
மது அருந்தியவரை கண்டறிய கருவி வேண்டும்: போலீசார் எதிர்பார்ப்பு
மது அருந்தியவரை கண்டறிய கருவி வேண்டும்: போலீசார் எதிர்பார்ப்பு
மது அருந்தியவரை கண்டறிய கருவி வேண்டும்: போலீசார் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 11, 2024 04:53 AM
திருவாடானை: அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் மது போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு சான்றிதழ் பெற முடியாததால் 'ப்ரீத் ஆல்ஹகால் அனலைசர்' கருவி போலீசாருக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலே அதிகளவில் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. அரசு போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் மது போதையால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
அதனால் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க போலீசார் வாகன சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
அவ்வாறு வாகன ஓட்டிகளை கைது செய்யும் போது டாக்டர் வழங்கும் சான்றை வைத்தே இந்த வழக்குகளை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
ஆனால் திருவாடானை அரசு மருத்துவமனையில் டாக்டர் மதியம் 12:30 மணியோடு சென்று விடுகின்றார். இதனால் மது போதை சான்றிதழ் வாங்க 80 கி.மீ., ராமநாதபுரம் செல்ல வேண்டியுள்ளது. போலீசார் கூறியதாவது:
ெஹல்மட் அணியாமல் ஏற்படும் விபத்துக்களை விட மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களே அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். மது போதை வாகன ஓட்டிகளை கைது செய்யும் போது மருத்துவ சான்றிதழ் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது அங்கு டாக்டர் இல்லாததால் 80 கி.மீ., துாரமுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
மது போதையில் உள்ளவரை பஸ்சில் அழைத்து சென்றால் அவர் தள்ளாடும் போது பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும்.
டூவீலரில் அழைத்து சென்றால் கீழே விழுந்து விடுவார். இதனால் பெரும் சிரமமாக உள்ளது. ஆகவே வாகன ஓட்டுனர் மது அருந்தியிருப்பதை உறுதி செய்ய வசதியாக ப்ரீத் ஆல்கஹால் அனலைசர் கருவி வழங்க வேண்டும்.
தற்போது வாயால் ஊத சொல்லி மது அருந்தியிருப்பதை உறுதி செய்கிறோம். ஆனால் துல்லியமாக கண்டுபிடிக்க கருவி இருந்தால் மட்டுமே முடியும்.
வாகன ஓட்டிகள் வாயில் இந்த கருவியை வைத்து ஊதும் போது மூச்சு காற்றின் தன்மையால் ஆல்ஹகால் அருந்தினரா என்ற விவரங்கள் கருவியில் பதிவாகும்.
எச்சில் மூலம் தொற்று நோய் பரவாமல் இருக்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியே புதிய ஸ்ட்ரா பொருத்தி ஊத செய்வோம். இக் கருவி இல்லாததால் நிறைய பேர் தப்பி விடுகின்றனர் என்றனர்.