ADDED : ஜூன் 16, 2024 04:40 AM
கமுதி: கமுதி அருகே மேலக்கொடுமலுார் குமரக்கடவுள் முருகன் கோயிலில்வைகாசி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முப்பழப் பூஜை நடந்தது. முதுகுளத்துார், கமுதி, அபிராமம், பரமக்குடி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் பாதயாத்திரையாக கோயிலுக்கு நடந்து வந்தனர்.
இதனை முன்னிட்டு குமரக்கடவுள் முருகனுக்கு எலுமிச்சம், பழச்சாறு, திரவியப் பொடி, நெல்லிப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழ வகைகள், இளநீர் உட்பட 33 வகை அபிஷேகங்கள் நடந்தது.
கால்வலி போக்கும் முக்கிய ஸ்தலமாக விளங்குவதால் பொதுமக்கள் உடைமரம் குச்சி வாங்கி கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கமுதி, பரமக்குடி, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ஆனந்தன் நடராஜன் செய்தார்.