Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மினி கூவமாகி ஊரே நாறுது; ஆற்றுப்பகுதியில் குளமாக தேங்கும் நகராட்சி கழிவுநீர்

மினி கூவமாகி ஊரே நாறுது; ஆற்றுப்பகுதியில் குளமாக தேங்கும் நகராட்சி கழிவுநீர்

மினி கூவமாகி ஊரே நாறுது; ஆற்றுப்பகுதியில் குளமாக தேங்கும் நகராட்சி கழிவுநீர்

மினி கூவமாகி ஊரே நாறுது; ஆற்றுப்பகுதியில் குளமாக தேங்கும் நகராட்சி கழிவுநீர்

ADDED : ஜூன் 27, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் ஊராட்சியில் சாலை குடியிப்பு அருகே நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையத்தில் கழிவுநீர் சரிவர சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் ஆற்று கால்வாய் மினிகூவமாக மாறியுள்ளது. கழிவுநீரை பருகும் கால்நடைகள் நோய் தாக்கி இறந்துள்ளன. துர்நாற்றத்தால் தொற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 2013 முதல் செயல்பாட்டில் உள்ளது. நகரில் 12,250 இணைப்புகள் வழங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 6.50 எம்.எல்.டி., கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது.

இவற்றை 5 பம்பிங் ஸ்டேஷன், 2 லிப்ட ஸ்டேஷன் மற்றும் மாடக்கொட்டான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் சுத்தம் செய்து கடைசியாக சாலை குடியிருப்பு அருகே ஆற்று வாய்க்காலில் கலக்கிறது.

தற்போது சரிவர கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றப்படுவதால் ஆற்றுப்பகுதி மினி கூவம் ஆறாக மாறியுள்ளது. மேய்ச்சல் நிலங்களிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரமலான் நகர் ஜமாத் தலைவர் அன்சத் ரிஸ்வன் கூறியதாவது:

சரிவர கழிவுநீரை சுத்தம் செய்யாமல் அப்படியே வெளியேற்றுவதால் மாடக்கொட்டான், கழுவூருணி, இளமனுார் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட இடங்களில் 3 கி.மீ., துாரத்தில் ஆற்றில் கழிவுநீர் குளமாக தேங்கியுள்ளது.

இவ்விடங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் நோய்பட்டு இறந்து விடுகின்றன. இதனிடையில் பெரிய அளவிலான குழாய்களை பதித்து கழிவுநீர் அதிகளவில் கொண்டுவர ராமநாதபுரம் நகராட்சி திட்டமிட்டுள்ளது. கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுவதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

மாடக்கொட்டான் கோவிந்தராஜ் கூறுகையில், ராமநாதபுரம் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படவில்லை. கழிவுநீரால் விளைச்சல் நிலங்கள் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள், கலெக்டர் வரை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

மக்கள் பலர் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து நன்னீராக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

---





      Our Apps Available On




      Dinamalar

      Follow us