/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மொஹரம் பண்டிகையில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஹிந்துக்கள் மொஹரம் பண்டிகையில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஹிந்துக்கள்
மொஹரம் பண்டிகையில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஹிந்துக்கள்
மொஹரம் பண்டிகையில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஹிந்துக்கள்
மொஹரம் பண்டிகையில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஹிந்துக்கள்
UPDATED : ஜூலை 18, 2024 09:46 PM
ADDED : ஜூலை 18, 2024 08:46 PM

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பண்டிகை தினத்தில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலம் காலமாக நடக்கும் இந்த மத நல்லிணக்க நிகழ்ச்சி நடந்தது.
சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமு நாச்சி அம்மன் தர்கா உள்ளது. இங்குள்ள மாமுநாச்சி அம்மன் கோயிலில் மொஹரம் பண்டிகை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் தர்கா மற்றும் பெரியகுளம் கிராமப்பகுதி முழுவதும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பிறைக்கொடி மற்றும் சந்தனக்குட சப்பர ஊர்வலம் நடந்தது.இரவில் நாடகம் நடந்தது.
சாயல்குடி, கடலாடி, ஒப்பிலான், மாரியூர், வாலிநோக்கம், காவாகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாமுநாச்சி அம்மன் கோயில் முன்புறம் உள்ள இடத்தில் பெரிய அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமானோர் கையில் பச்சை வண்ண பிறை கொடியை ஏந்தியவாறு அக்னி குண்டத்தில் இறங்கினர்.
அருகில் தலையில் முக்காடு போட்டு அமர்ந்திருந்த நேர்த்திக்கடன் பெண்களின் தலையில் தீக்கங்குகளை கொட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பெரியகுளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.