Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோத்தகிரி அருகே தண்ணீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் உண்ணாவிரதம்

கோத்தகிரி அருகே தண்ணீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் உண்ணாவிரதம்

கோத்தகிரி அருகே தண்ணீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் உண்ணாவிரதம்

கோத்தகிரி அருகே தண்ணீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் உண்ணாவிரதம்

ADDED : அக் 14, 2025 08:58 PM


Google News
Latest Tamil News
கோத்தகிரி; கோத்தகிரி அருகே, தேனாடு புதுநகர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டத்தை கண்டித்து, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட, புது நகர் கிராமத்தில், பல ஆண்டுகளாக, 150க்கு மேற்பட்ட குடும்பங்களில், ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இங்கு குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது.

மாநில முதல்வர், மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கிராம மக்கள் குறிப்பாக, பெண்கள் நீண்ட துாரம் நடந்து சென்று, சுகாதாரம் இல்லாத தண்ணீரை சுமந்து தங்கள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதனால், அதிருப்தி அடைந்த கிராம மக்கள் கிராம பிரமுகர் அ.தி.மு.க.,வை சேர்ந்த வில்சன் தலைமையில், தேனாடு ஊராட்சி அலுவலகம் முன், நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஸ்டீபன் மற்றும் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் அறிந்த கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆறுமுகம், ஆர்.ஐ., பியூலா, வி.ஏ.ஓ., யுவராஜ் மற்றும் சோலூர்மட்டம் எஸ்.ஐ., கண்ணன் ஆகியோர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தையில், 'இப்பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, எம்.பி., நிதியில், 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி, நிறைவடையும் பட்சத்தில், கிராமத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். அதுவரை, குடியிருப்புகளுக்கு தடை இல்லாமல் தண்ணீர் கிடைக்க தற்காலிக, நடவடிக்கை எடுக்கப்படும்,' என, முடிவு செய்யப்பட்டது.

இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us