Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆறாவது வார்டில் தீராத பிரச்னைகள்; கூடலூர் நகராட்சியில் அவலம்

ஆறாவது வார்டில் தீராத பிரச்னைகள்; கூடலூர் நகராட்சியில் அவலம்

ஆறாவது வார்டில் தீராத பிரச்னைகள்; கூடலூர் நகராட்சியில் அவலம்

ஆறாவது வார்டில் தீராத பிரச்னைகள்; கூடலூர் நகராட்சியில் அவலம்

ADDED : ஜூன் 23, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்; கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, 6வது வார்டு விஜயநகர் பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, முன்வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---இது குறித்து விஜய நகர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்,' விஜயநகர் உருவாகி, 35 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் பகுதியில் வசிப்போர் கூடலூர் நகராட்சியிடம் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விஜய நகரின் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்கா, 35 சென்ட் பரப்பளவில் உள்ளது. ஆனால், தகுந்த பராமரிப்பு இல்லாததால் முட்புதர்கள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து பயனற்றதாக உள்ளது. சமூக விரோதிகள் கூடாரமாகவும் உள்ளது. தினசரி இரவு நேரங்களில் மது அருந்துவோர் இப்பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இப்பகுதியை சுத்தம் செய்து, மக்கள் நடை பயிற்சி செல்ல ஏதுவாக நகராட்சி நிர்வாகம் நடைபாதை அமைத்து தர வேண்டும்.

எங்கள் பகுதியில், 10 அல்லது, 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீண்ட நாட்கள் இருப்பு வைத்து குடிநீரை பருகுவதால், உடல் உபாதைகள் மற்றும் வியாதிகள் பெருக காரணமாகிறது. எனவே வாரம் ஒரு முறை தவறாது குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவில் ஒரு பொது குடிநீர் குழாய் அமைத்து, 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை தற்போது பழுதடைந்து, மக்கள் நடப்பதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் வசதி இல்லாமல் உள்ளது.

எனவே, தமிழக அரசு அறிவுறுத்தியபடி ஏற்கனவே உள்ள சாலையை அகற்றிவிட்டு, அதில் புதிய தார் சாலை அமைக்க கூடலூர் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us