Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி

களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி

களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி

களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி

ADDED : ஜூன் 25, 2025 10:06 PM


Google News
Latest Tamil News
-நிருபர் குழு-

ஆங்கிலேயர்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பு, நீலகிரிக்கு வந்தவுடன், 'தங்கள் நாட்டில் உள்ள இதமான காலநிலை இப்பகுதியில் நிலவ வேண்டும்,' என்ற நோக்கத்திற்காக கடும் குளிரான இப்பகுதியில், 400 வகையான தாவர இனங்களை இங்கு அறிமுகப்படுத்தினர்.

அதில், உள்ளூரில் எரிபொருளாக பயன்படுத்த அறிமுகப்படுத்திய, கற்பூரம், சீகை போன்ற மர வகைகள் உள்ளூர் மரங்களையும், தாவரங்களையும் வளர விடாமல் பெருமளவில் அழித்துவிட்டன. மேலும், 'லாண்டனா கமரா' என்ற உண்ணி செடி; 'பார்த்தீனியம்' மற்றும் 'சிஸ்ட்ரம் ரொபஸ்டிக்கம்', இப்படோரியம் போன்ற அன்னிய களை செடிகள் மாவட்டத்தின் சூழலை அழித்து வருகின்றன. இங்கு வளரும் அனைத்து தாவர வகைகளும், மரங்களும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், இயற்கையால் வடிவமைக்கப்பட்டவை.

வனத்துக்கு எந்த பயனும் இல்லை


ஆனால், ஆங்கிலேயர்களால், அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறிகள், பூக்கள் மற்றும் மர வகைகள், களை செடிகள் இந்த மண்ணுக்கு உரியவையாக இல்லாததால், தண்ணீரை அதிகளவில் உறிஞ்சி வருகின்றன. அதில், சிறிய வண்ண பூக்களுடன் காணப்படும் உண்ணி செடிகள் அழகுக்காக வீட்டு வேலிகளில் சிலர் வளர்த்து வருகின்றனர். சாலையோரங்களில் பயணிகளை கவர நுாற்றாண்டு காலமாக வளர்க்கப்பட்டன. இவை வண்ணமயமாக காணப்பட்டதாலும், வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் எந்த வகையிலும் பயன்படுவதில்லை.

மாறாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வளரும் இத்தகைய களை செடிகளால் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக் கூடிய தாவரங்கள், வளர்வது தடைப்படுகிறது.

கோடை காலத்தில் தீப்பற்றும் தன்மை கொண்ட இவையால், வனத்தீ அபாயம் ஏற்படுகிறது. பார்த்தீனியம் செடிகள், மனிதர்கள், வனவிலங்குகளுக்கும் சுவாசம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. பள்ளி வளாகங்களில் இவை காணப்படுவதால், குழந்தைகள் செடிகளை பறித்து விளையாடுவதால் தோல் வியாதிகள் ஏற்படுகிறது.

கோர்ட் உத்தரவால் அகற்றும் பணி


இந்நிலையில், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து, அன்னிய மரமான, சீகை, கற்பூர மரங்கள் களை செடி குறித்த கணக்கெடுப்பு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தொடர்ந்து, நீதிபதிகள் உத்தரவுப்படி, வனப்பகுதிகளில் உள்ள உண்ணி செடிகள், அன்னிய மரங்களை வனத்துறையினர் அகற்றி வருகின்றனர்.

ஆனால், மாவட்டம் முழுவதும் அதிகம் ஆக்கிரமித்து வரும் பார்த்தீனியம், 'இப்படோரியம்' களை செடிகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை இல்லை. இவைகளால், எதிர்காலத்தில் வன விலங்குகளுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

முதுமலை வனத்துறையினர் கூறுகையில், 'மாவட்ட வனப்பகுதிகளில், ஐகோர்ட் உத்தரவுப்படி அன்னிய மரங்கள், களைச்செடிகள் அகற்றி வருகிறோம். நடப்பாண்டு, 1,500 எக்டர் பரப்பளவில் உண்ணி செடிகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு, 1,500 எக்டர் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளில், தாவர உண்ணிகள் விரும்பும் தாவரங்கள் இயற்கையாக வளர்வதுடன், வனத்துறை சார்பில் புற்கள் நடவு செய்து வளர்த்து வருகிறோம். இப்பணிகள் தொடரும்,' என்றனர்.

மனித- வனவிலங்கு மோதலுக்கு இதுவும் காரணம்

நீலகிரி அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ கூறுகையில், ''மாவட்ட முழுவதும் அன்னிய தாவர வகைகள் நிரம்பி வருவதால், உணவு தாவரங்களின் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக, வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதற்கு, புல்வெளிகள் அனைத்தும் அழிந்து வருவது முக்கிய காரணம். குறிப்பாக, முதுமலை முழுவதும் உண்ணி செடிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும், அன்னிய மரங்கள், உள்ளூர் தாவர வகைகளை விட, 10 மடங்கு தண்ணீரை எடுத்து கொண்டு, வேகமாக வளர்ந்து நிலப்பரப்பு முழுவதையும் ஆக்கிரமிக்கின்றன. இந்த சூழலில், 200 ஆண்டு களுக்கு முன்பு இருந்த நீலகிரியின் பல்லுயிர் சூழலை மீட்டெடுக்க, மாவட்டத்தில் பாதிப்பில் உள்ள, 25 ஆயிரம் எக்டர் காப்புக்காடுகளில் உள்ள கற்பூரம் மற்றும் சீகை போன்ற மரங்களை அகற்றி, உள்ளூர் தாவர வகைகளை வளர்ப்பது அவசியம். இதனால், மனித - வனவிலங்கு மோதலும் குறையும். மாநில அரசு இதனை கொள்கை முடிவாக எடுத்து, இவற்றை அகற்றினால் நீலகிரியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க முடியும்,'' என்றார்.



அழிந்த 60 வகையான புல் வகைகள்

நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை (நெஸ்ட்) தலைவர் சிவதாஸ் கூறுகையில், ''மூக்குத்தி பூ, உண்ணி செடி என அழைக்கப்படும், லாண்டனா செடிகளின் காய்களை உட்கொள்ளும் பறவைகளின் எச்சத்தாலும், பூக்களின் மகரந்தங்களாலும் இவை அதிகரிக்கின்றன. இவற்றின் மணம், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இவற்றால், நுாற்றுக்கணக்கான மூலிகைகள், 60க்கும் மேற்பட்ட புல் வகைகள் அழிந்தன. பார்த்தீனிய செடிகளின் பூக்கள் மகரந்தம் காற்றில் பரவி நேரடியாக நுகரும் போது, குரங்கு, காட்டெருமை, மாடு உள்ளிட்டவைகளுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்துமா, தோல் நோய் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, அலர்ஜி உள்ளிட்டவை அதிகரிக்கிறது. இதனை அழிக்க, அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் இணைந்து ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்,'' என்றார்.



வேரோடு அழித்தால் மட்டுமே பரவாது

தாவரவியல் ஆய்வாளர் ராஜன் கூறுகையில், ''வனத்தில் உள்ள களை செடிகளை வேரோடு முற்றிலும் அகற்ற வேண்டும். உண்ணி, பார்த்தீனியம், இப்படோரியம் செடிகள் விதைகள் மூலம் பரவுவதை தடுக்க, இச்செடிகளில் பூ பூப்புக்கு முன் வேரோடு அகற்றி, அழிக்க வேண்டும். அப்பகுதிகளில் தாவர உண்ணிகள், விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள், புற்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம், பல்லுயிர் சூழலை பாதுகாக்க முடியும்; தாவர உண்ணிகளில் மேய்ச்சல் வனப்பகுதியின் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.



அழிக்க அதிக நிதிமனித வளம் அவசியம்

மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''அன்னிய மரங்களை அகற்றுவது ஒரு சவாலான செயல், ஏனெனில் இது பரவலாக பரவி உள்ளன. இதற்கு அதிக நேரம், நிதி மற்றும் மனித வளம் தேவைப்படுகிறது. கடந்த, 5 ஆண்டுகளில், நீலகிரி வனக்கோட்டங்களில், 1,200 எக்டர் பரப்பளவில் அன்னிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இவற்றை அதிகளவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுதோறும், 30 ஆயிரம் சோலை மரக்கன்றுகளை, பொதுமக்கள் உட்பட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us