Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 'கேட்' அவசர காலங்களில் கிராம மக்கள் பாதிக்கும் அபாயம்

பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 'கேட்' அவசர காலங்களில் கிராம மக்கள் பாதிக்கும் அபாயம்

பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 'கேட்' அவசர காலங்களில் கிராம மக்கள் பாதிக்கும் அபாயம்

பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 'கேட்' அவசர காலங்களில் கிராம மக்கள் பாதிக்கும் அபாயம்

ADDED : மார் 18, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
பந்தலுார், : பந்தலுார் பஜார் பகுதியில் இருந்து, 10 நம்பர் பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில், தனியார் எஸ்டேட் நிர்வாகம் 'கேட்' அமைத்துள்ளதால் பழங்குடியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பந்தலுார் பஜார் பகுதியை ஒட்டி, 'பத்தாம் நம்பர்' பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், தனியார் எஸ்டேட்டுக்கு மத்தியில் செல்லும் பாதையை நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலையாக மாற்றியது.

இந்த சாலை வழியாக செல்லும் சிலர் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை உடைத்து வீசுவது மற்றும் திறந்த வெளியை கழிப்பிடம் போல மாற்றுவது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், எஸ்டேட் நிர்வாகம் திடீரென சாலையில் 'கேட்' அமைத்து, செக்யூரிட்டியை நியமித்துள்ளது. பழங்குடியினர் மற்றும் நாள்தோறும் 'வாக்கிங்' செல்பவர்கள், அனுமதி பெற்று செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அவசர காலங்களில் பாதிப்பு


பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையை நகராட்சி சீரமைத்த நிலையில் அதனை பயன்படுத்த தடை விதித்துள்ளதால், அவசர காலங்களில் பழங்குடியினர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினர் சங்க தலைவர் சந்திரன் கூறுகையில், ''ஏற்கனவே இதே எஸ்டேட் நிர்வாகம் ஏலமன்னா பகுதிக்கு செல்லும் சாலையில் தடுப்பு அமைத்திருந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் தடுப்பை அகற்றி தற்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

ஆனால், நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் நகராட்சி சாலையில், எஸ்டேட் நிர்வாகம் தடுப்பு அமைத்துள்ளதால் பழங்குடியின மக்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் கேட் முழுமையாக மூடப்படும் நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல முடியாத நிலையில் பாதிக்கப்படுகின்றனர்.

இரவு, 7:00 மணிக்கு மேல் இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் நடந்து செல்லவும் முடியாது. இங்கு நடக்கும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு, எஸ்டேட் நிர்வாகம் தனியாக காவலரை நியமித்து கண்காணிக்கலாம். அதை விடுத்து தடுப்பு அமைத்துள்ளது குறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்படும்.

நடவடிக்கை இல்லாவிட்டால், ஊட்டிக்கு முதல்வர் வருகையின் போது, பழங்குடியின அமைப்பு சார்பில் நேரடியாக மனு கொடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us