Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நிலச்சரிவு அபாய பகுதியில் நடக்கும் பணியால் அச்சம்; கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி

 நிலச்சரிவு அபாய பகுதியில் நடக்கும் பணியால் அச்சம்; கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி

 நிலச்சரிவு அபாய பகுதியில் நடக்கும் பணியால் அச்சம்; கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி

 நிலச்சரிவு அபாய பகுதியில் நடக்கும் பணியால் அச்சம்; கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி

ADDED : டிச 03, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
குன்னுார்: குன்னுாரில் நிலச்சரிவு அபாயபகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில், பொக்லைன் பயன்படுத்தி மண் தோண்டப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில், இயற்கையை பாதுகாக்க, 'மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டதுடன், செங்குத்தான பகுதிகளில் பொக்லைன் பயன்பாடு, பாறை உடைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஐகோர்ட் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கோத்தகிரி, குன்னுார் நகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளில் மலையை கரைத்து, பல்வேறு கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. இங்கு,'283 இடங்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள்; அப்பகுதிகளில் எவ்வித கட்டுமானங்களும் கட்ட கூடாது,' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், பட்டியலில் உள்ள சில பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.

விதிமீறிய பணி இதற்கு உதாரணமாக, குன்னுார் நகராட்சி அலுவலகம் செல்லும் மவுன்ட் ரோட்டில், கோர்ட் உத்தரவை மீறி, பொக்லைன் பயன்படுத்தி செங்குத்தான பகுதியில் மண் தோண்டப்பட்டு வருகிறது. இதனால், மழை காலங்களில் அப்பகுதி சேறும், சகதியாக மாறிமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அங்குள்ள குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் வெளி யிட்ட நிலச்சரிவு அபாய பட்டியலில் அந்த இடம் இருந்தும், பல சமூக ஆர்வலர்கள் இது குறித்து புகார் தெரிவித்தும், அதனை அதி காரிகள் கண்டு கொள்வதில்லை. இத்தகைய காரணங்களால் மழை காலத்தில் அப்பகுதியில் பேரிடர் ஏற்படும் அபாயம் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் நீலகிரி பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''குன்னுார் மவுன்ட் ரோட்டில், ஐகோர்ட் உத்தரவை மீறி, பொக்லைன் இயந்திரங்களை பகிரங்கமாக பயன்படுத்தி தோண்டும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள நீரோட்ட பகுதிகளையும் மண் போட்டு மூடி உள்ளனர்.

இதன் மேற்பகுதியில் உள்ள வீடுகள் இடியும் அபாயத்தில் இருந்தும் அரசு அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர். அரசு இயந்திரம் அமைதி காப்பது, இதன் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருப்பதை தெளிவாகிறது. பேரிடர் பட்டியலில் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் அனுமதியுடன் நடக்கும் விதிமீறலால், மழை காலத்தில் பாதிக்கப்படுவது மக்கள் தான். இது குறித்து மாநில முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

குன்னுார் சார் ஆட்சியர்சங்கீதா கூறுகையில்,'' அங்கு பணி செய்ய புவியியல் துறையினர் அனுமதி கொடுத்துள்ளனர். பணி நடக்கும் இடத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us