/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் படிப்படியாக குறைப்பு! வரும் சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் படிப்படியாக குறைப்பு! வரும் சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?
கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் படிப்படியாக குறைப்பு! வரும் சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?
கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் படிப்படியாக குறைப்பு! வரும் சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?
கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் படிப்படியாக குறைப்பு! வரும் சட்டசபை தேர்தல் எதிரொலி காரணமா?
ADDED : மார் 18, 2025 09:43 PM

ஊட்டி: நீலகிரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தல் எதிரொலியை அடுத்து, நகை கடன் வழங்குவது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
வங்கி செயலாளர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் சங்கங்களில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், சிறு விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன், உரக்கடன், கறவை மாடு கடன்உள்ளிட்ட பல்வேறு திட்ட கடன்கள் வழங்கப்படுகிறது.
மலை காய்கறி, தேயிலை விவசாயம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு நகை கடன் பெற, கிராமங்களின் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் நாடி செல்கின்றனர். ஒருவர் அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை நகை கடன் பெறலாம்.மேலும், அந்தந்த வங்கிகளின் பணம் பரிவர்த்தனையை பொறுத்து, நகை கடன் வழங்கப்படுகிறது.
தேர்தல் எதிரொலியால் மாற்றமா?
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, நகை கடன் பண பரிவர்த்தனை முழுவதும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வங்கியின் செயல்பாடு பொறுத்து நகை கடனுக்கான பணம் வழங்கப்படுகிறது.
கடந்த, 21ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தேர்தல் அறிவிப்பில் இடம் பெற்ற நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்த விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே, 2026 சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், 'தேர்தல் அறிவிப்பில், நகை கடன் தள்ளுபடி நிச்சயம் வரும்,' என்ற எதிர்பார்ப்பில், சில விவசாயிகள் அல்லது விவசாயிகள் போர்வையில் வரும் பிற நபர்கள், கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைக்க செல்வது அதிகரித்து வருகிறது.
இதனால், உஷாரான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம், நகை கடன் பணம் பரிவர்த்தனையை, 'மறைமுகமாக' படிப்படியாக குறைக்க துவங்கியுள்ளது. அதே சமயத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் சில வங்கிகளுக்கு கேட்கும் நிதியில், 30 சதவீதம் வழங்கப்படுகிறது. மேலும், பல வங்கிகளில் நிதி போதிய அளவில் இல்லாததால், வங்கிக்கு வரும் சிறு விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
வங்கி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல விவசாயிகள் தக்க ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிக்கு நகை கடன் பெற வருவது வழக்கம். அதில், பல வெளிநபர்களும் மறைமுகமாக ஈடுபட்டது, கடந்த முறை நடந்த நகை கடன் குறித்து விசாரணையின் போது தெரிய வந்தது.
இதனால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும் பணம் பரிவர்த்தனையை வங்கிகளுக்கு தகுந்தாற் போல், படிப்படியாக குறைக்க துவங்கி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயிகள் எதிர் பார்க்கும் அளவுக்கு நகைக்கடன் வழங்க முடிவதில்லை. அரசு உத்தரவின் பேரில் விவசாயிகள் பாதிக்காமல் பல்வேறு விசாரணைகளுக்கு பின்பு தான், நகை கடன் வழங்கப்படுகிறது,' என்றனர்.