Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய காட்டேஜ்களுக்கு 'சீல்'! ஐகோர்ட் உத்தரவின் கீழ் நடவடிக்கை

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய காட்டேஜ்களுக்கு 'சீல்'! ஐகோர்ட் உத்தரவின் கீழ் நடவடிக்கை

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய காட்டேஜ்களுக்கு 'சீல்'! ஐகோர்ட் உத்தரவின் கீழ் நடவடிக்கை

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய காட்டேஜ்களுக்கு 'சீல்'! ஐகோர்ட் உத்தரவின் கீழ் நடவடிக்கை

ADDED : அக் 05, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், அனுமதியின்றியும், விதிமீறி காட்டேஜ் போல செயல்பட்டு,அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும், கட்டடங்களுக்கு, 'சீல்' வைக்கும் பணி,ஐகோர்ட் உத்தரவின் படி விரைவு படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் 'மாஸ்டர் பிளான்' சட்டத்தை மீறி பல கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதனை கட்டறிந்து நடவடிக்கை எடுக்க, ஊட்டி கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்ட, ஊட்டியில் பல கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கும் பணி நடந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, நகராட்சி பகுதிகளில், குடியிருப்புக்கான அனுமதி பெற்ற, வீடுகளை கட்டிய பின், அதனை சுற்றுலா பயணிகளுக்கான காட்டேஜ்களாக நடத்தும் விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன.

இது போன்ற காட்டேஜ்களால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், உரிய விதிமுறைகளின் கீழ் ஓட்டல்கள்; சுற்றுலா விடுதிகளை நடத்தி, அரசுக்கு முறையாக வரி செல்லும் தனியார் ஓட்டல் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இது தொடர்பாக, ஏற்கனவே சுற்றுலா விடுதி, ஓட்டல்கள் உரிமையாளர் சங்கத்தின் சார்பில், மாநில முதல்வர், சுற்றுலா துறை இயக்குனருக்கு புகார் அனுப்பட்டுள்ளது.

ஐகோர்ட் உத்தரவு

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் இந்த பிரச்னையில் தலையிட்டு, விதிகளை மீறி செயல்படும் சுற்றுலா விடுதிகள், காட்டேஜ்களை வரன்முறைபடுத்தும் வகையிலும், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில், 'விதிமீறிய புற்றீசல் போல பெருகி வரும் காட்டேஜ்கள் குறித்து பட்டியலை எடுக்க வேண்டும்.

அதில், அரசின் விதிகளை பின்பற்றாமல் உள்ளவற்றை 'சீல்' வைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், வருவாய், நகராட்சி, சுற்றுலா துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்,' எனவும் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அமைக்கப்பட்ட குழுவினர் மாவட்டத்தில், 'நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி,' என, உள்ளாட்சி அமைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு விதிமீறிய காட்டேஜ்களின் பட்டியலை தயார் செய்து, ஆய்வு நடத்தி 'நோட்டீஸ்' அனுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விதிமீறிய காட்டேஜ்களுக்கு 'சீல்'

இதுவரை, ஊட்டி, குன்னுார், மஞ்சூர், கூடலுார், பந்தலுார் உட்பட சில பகுதிகளில் பல சுற்றுலா விடுதி, காட்டேஜ்குளுக்கு 'சீல்' வைத்துள்ளனர்.

இதனை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில், வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கும், ஐகோர்ட்டுக்கும் அறிக்கை சமர்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''ஐகோர்ட் உத்தரவுப்படி, மாவட்டத்தில், குயிருப்புக்கு அனுமதி வாங்கி, வர்த்தக ரீதியாக சுற்றுலா காட்டேஜ்களாக செயல்படும் கட்டடங்களை அடையாளம் கண்டு நடடிக்கை எடுக்கும் பணி நடந்து வருகிறது.

அதன்படி, கடந்த மூன்று மாதங்களில், 53 விதிமீறிய காட்டேஜ் கட்டடங்களுக்கு ' சீல் ' வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அதிகாரிகள் அடங்கிய குழுவினர், விதிமீறிய காட்டேஜ்களை அடையாளம் கண்டு, உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி ' சீல்' வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி சுற்றுலா விடுதிகள், காட்டேஜ் நடத்துபவர்கள் அரசின் விதிகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும். அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட கூடாது,''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us