ஆற்றில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
ஆற்றில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
ஆற்றில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
ADDED : ஜூலை 22, 2024 09:12 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே பொன்னாணி ஆற்றில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்டகப்பட்டது.
பந்தலுார் அருகே பாலாவயல் வழியாக கேரள மாநிலம் நோக்கி பாயும், பொன்னானி ஆறு உள்ளது. இங்கு கடந்த, 21ஆம் தேதி மதியம் பாலா வயல் என்ற இடத்தில், பிதர்காடு சந்தக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்த குணசேகரன்,18, பதினெட்டு குன்னு என்ற இடத்தை சேர்ந்த கவியரசன்,17, மற்றும் நண்பர்கள் இணைந்து மீன் பிடிக்க சென்று உள்ளனர். அப்போது இவர்கள் இருவரும், ஆற்று சூழலில் சிக்கி கொண்ட நிலையில் குணசேகரன் மட்டும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், கவியரசன் உடல் கிடைக்காத நிலையில் கடந்த மூன்று நாட்களாக கூடலுார் தீயணைப்பு துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, கேரளாவில் முகாமிட்டிருந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறுவனின் உடல் கிடைக்காத நிலையில், நேற்று மாலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலமாகவும், கேரளா மாநிலம் கல்பெட்டா பகுதியில் செயல்பட்டு வரும் வயநாடு சோசியல் சர்வீஸ் அமைப்பை சேர்ந்த மீட்பு குழுவினரும், இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சிறுவன் ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து, 200 மீட்டர் தொலைவில், புதர்களுக்கிடையே சிக்கி இருந்த சிறுவன் கவியரசன் உடலை, மாலை, 4:00 மணிக்கு மீட்டனர். சிறுவன் உடல் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று நடக்கும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க பட உள்ளது.