ADDED : ஜூலை 30, 2024 01:53 AM

கூடலுார்;நீலகிரி மாவட்டம், கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊட்டி -- கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், தவளை மலைஅருகே, இரவு, 9:00 மணிக்கு, மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், ஊட்டி - கூடலூர் மற்றும் கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. அப்பகுதி, வனப்பகுதி என்பதால், ஓட்டுனர்களும், பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்கள், பொக்லைன் வாயிலாக மண்ணை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.