Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கழிப்பறைக்கு பயன்படுத்தும் நீரை குடிக்க வினியோகிக்கும் கொடுமை

கழிப்பறைக்கு பயன்படுத்தும் நீரை குடிக்க வினியோகிக்கும் கொடுமை

கழிப்பறைக்கு பயன்படுத்தும் நீரை குடிக்க வினியோகிக்கும் கொடுமை

கழிப்பறைக்கு பயன்படுத்தும் நீரை குடிக்க வினியோகிக்கும் கொடுமை

ADDED : செப் 16, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
ப.வேலுார்: ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பறைக்கு பயன்படுத்தும் தண்ணீரை குடிக்க வினியோகிப்பதால், பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் பயணியரின் குடிநீர் தேவைக்காக குழாய் அமைத்துள்ளனர்.

இதில், காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன் மோட்டார் பழுதானதால், குடிநீர் வினியோகம் நின்றது.

இதற்கு மாற்றாக, கட்டண கழிப்பறைக்கு பயன்படுத்தும் டேங்க் தண்ணீரை, குடிநீருக்கு மாற்றியுள்ளனர். இந்த தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், பாட்டிலில் பிடித்து குடிக்கும் பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.

பயணியர் கூறியதாவது:

ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் குழந்தைகள் முதல் முதியவர் வரை இந்த குடிநீரை கேன்களில் நிரப்பி, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கின்றனர். கழிப்பறையில் உள்ள தண்ணீர் டேங்கை சுத்தப்படுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. அதிலிருந்து இணைப்பு கொடுத்து, குடிநீராக வினியோகிப்பது மனித தன்மையற்ற செயல்.

இவ்வாறு கூறினர்.

டவுன் பஞ்சாயத்து ஊழியர்களிடம் கேட்டபோது, 'காவிரி நீரை மோட்டார் மூலம் டேங்கிற்கு ஏற்றி, பஸ் ஸ்டாண்ட் பயணியருக்கு குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

'சில மாதங்களுக்கு முன் மோட்டார் பழுதானதால், காவிரி நீரை டேங்கில் ஏற்ற முடியவில்லை.

'வேறு வழியின்றி கழிப்பறையில் இருந்து இணைப்பு கொடுத்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது' என்றனர்.

டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகத்திடம் கேட்டபோது, ''இந்த புகார் தற்போது தான் என் கவனத்திற்கு வந்துள்ளது. உடனடியாக மோட்டாரை பழுது பார்க்க உத்தரவிட்டுள்ளேன். பயணியருக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இந்த குழாயில் தண்ணீரை பிடித்து, பேரூராட்சி அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் குடிப்பரா என பயணியர் கேள்வி எழுப்பியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us