Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உழவர்சந்தை பகுதியில் தனியார் கடைகளை அகற்ற வரும் 25ல் மறியல் போராட்டம்: வி.மு.க., அறிவிப்பு

உழவர்சந்தை பகுதியில் தனியார் கடைகளை அகற்ற வரும் 25ல் மறியல் போராட்டம்: வி.மு.க., அறிவிப்பு

உழவர்சந்தை பகுதியில் தனியார் கடைகளை அகற்ற வரும் 25ல் மறியல் போராட்டம்: வி.மு.க., அறிவிப்பு

உழவர்சந்தை பகுதியில் தனியார் கடைகளை அகற்ற வரும் 25ல் மறியல் போராட்டம்: வி.மு.க., அறிவிப்பு

ADDED : அக் 23, 2025 01:24 AM


Google News
நாமக்கல், விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை கொண்டுவந்து, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதால், விவசாயிக்கும் பயன், நுகர்வோருக்கும் பயன் ஏற்படும் என்ற நோக்கத்தில் உழவர் சந்தை துவக்கப்பட்டது.

தற்போது, அதை சிதைக்கும் வகையில், நாமக்கல் உழவர் சந்தைக்கு முன் வியாபாரிகள் சந்தை செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலமுறை கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தும், உழவர் சந்தைக்கு வெளியில் வியாபாரிகள் கடை அமைத்து விற்பைன செய்வதை தடை செய்யவில்லை. மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

மேலும், உழவர் சந்தை அமைந்துள்ள பூங்கா சாலை மற்றும் கோட்டை சாலைகளில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் சாலைக்கு அருகில், பல கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வியாபாரிகள் அந்த இடத்தில் காய்கறி கடைகளை அமைக்காமல், உழவர் சந்தை முன், கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் வியாபாரம் மேற்கொள்கின்றனர்.

உழவர் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நாமக்கல் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், வரும், 25 காலை, 7:00 மணி முதல், நாமக்கல் உழவர் சந்தை முன், விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில், மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us