Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு காத்திருப்பு போராட்டம் வாபஸ்

கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு காத்திருப்பு போராட்டம் வாபஸ்

கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு காத்திருப்பு போராட்டம் வாபஸ்

கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு காத்திருப்பு போராட்டம் வாபஸ்

ADDED : செப் 11, 2025 01:56 AM


Google News
திருச்செங்கோடு :திருச்செங்கோடு அடுத்த மொளசி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் எரிவாயு தகன மேடைக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை, பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அங்கு திரண்ட ஊர் மக்கள், 'எரிவாயு தகனமேடை ஏற்கனவே, 2 கி.மீ., தொலைவில் உள்ள மச்சான்பாளையத்தில் உள்ளது.

எனவே, எரிவாயு தகனமேடை முனியப்பன்பாளையத்தில் தேவை இல்லை. எரிவாயு தகன மேடை அமைக்க உள்ள பகுதியை சுற்றிலும் கரும்பு தோட்டம் உள்ளது. எரிவாயு தகன மேடை அமைந்தால், கரும்பு தோட்டத்திற்கு பெண்கள் வேலைக்கு வரமாட்டார்கள்' என, எதிர்ப்பு தெரிவித்தனர்.திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி, வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானமடையாததால், பணியை பாதியில் நிறுத்தி அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், மொளசி போலீசில் புகாரளித்தார். புகார்படி, முத்துகிருஷ்ணன், 50, செந்தில்குமார், 40, சரவணன், 40, மாதவன், 48, நந்தகுமார், 44, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்தும், பட்டா நிலத்திற்குள் மயானத்திற்கு செல்ல பாதை அமைக்க கூடாது என வலியுறுத்தியும், திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகம் முன், கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இரவு, 8:00 மணியளவில் கைது செய்யப்பட்ட, ஐந்து பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us