Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி,முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி,முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி,முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி,முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ADDED : செப் 22, 2025 01:53 AM


Google News
நாமக்கல்:புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, மோகனுார் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும், அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில், இறந்த தங்களது முன்னோர்களான பித்ருக்களை நினைத்து, ஆறு, நீர்நிலைகளுக்கு சென்று, பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபடுவர். பட்சம் என்றால், 15 நாட்கள், மறைந்த நம் முன்னோர், பித்ரு லோகத்திலிருந்து, 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே, ஆவணி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையில் துவங்கி, புரட்டாசி அமாவாசை வரை உள்ள, 15 நாட்கள் மஹாளய பட்சம் ஆகும்.

புரட்டாசி மஹாளய அமாவாசையான நேற்று, ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில், பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனுார் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, அசலதீபேஸ்வரர் கோவில் படித்துறையில், ஏராளமான பொதுமக்கள், தங்களது இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

நேற்று அதிகாலை முதலே, குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்த பக்தர்கள், புனித நீராடி வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், எள், பச்சரிசி, காய்கள், கீரைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வைத்து, குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரிசி மாவில் உருண்டை செய்து, காவிரி ஆற்றில் விட்டு தீபமேற்றி வழிபட்டனர்.நாமக்கல், சேலம், திருச்சி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, காவிரியில் புனித நீராடி, அசலதீபேஸ்வரர் மற்றும் மதுகரவேணி அம்பாளை வழிபட்டனர். காவிரி கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us