ADDED : செப் 17, 2025 01:52 AM
ப.வேலுார் :ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடலாயத்தில், கலிக்கம் கண்சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த சித்தா டாக்டர் அசோகன் கூறுகையில், ''உடம்பில் உள்ள நோய்களை, மூலிகை சாற்றை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்குவது கலிக்கம் சிகிச்சை.
இதனால் கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், கண்புரையை சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்பு, தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில், அசைவம் சாப்பிடக்கூடாது. ஐ.ஓ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும், இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை,'' என்றார்.