ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
ராசிபுரம்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, 'டிட்டோஜாக்' சார்பில், நேற்று மாலை ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தொடக்க கல்வித்துறையில், 90 சதவீத ஆசிரியர்களை பாதிக்கும், மாநில பணி மூப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்; தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை, பதவி உயர்வு குறித்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமை வகித்தார். கொள்கை விளக்க செயலாளர் அரங்கநாயகி வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் பாரதி, மாநில பொருளாளர் செல்வராசன் ஆகியோர் பேசினர். இதில், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.