/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ மருத்துவமனை இடமாற்றம் நாகையில் 4 மணி போராட்டம் மருத்துவமனை இடமாற்றம் நாகையில் 4 மணி போராட்டம்
மருத்துவமனை இடமாற்றம் நாகையில் 4 மணி போராட்டம்
மருத்துவமனை இடமாற்றம் நாகையில் 4 மணி போராட்டம்
மருத்துவமனை இடமாற்றம் நாகையில் 4 மணி போராட்டம்
ADDED : ஜூன் 12, 2024 06:15 AM

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், நாகை நகரின் மத்தியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட மருத்துவமனை நவீன உட்கட்டமைப்புடன் புரைமைக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன், பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் புறநோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நாகையில் இருந்து 12 கி.மீ.,யில், ஒரத்துாரில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு, மார்ச் 4ம் தேதி, பொதுமக்களின் சேவைக்காக அரசு அர்ப்பணித்தது. இதையடுத்து, ஏப்., 24ம் தேதி, நாகை நகரில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை முழுவதுமாக, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, மகப்பேறு, குழந்தைகள் பிரிவு மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு, இதே இடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவசர சிகிச்சை, புற நோயாளிகள் பிரிவு சரிவர இயங்கவில்லை. இங்கு, டாக்டர்கள் இல்லாமல் மருத்துவ மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே பணியில் உள்ளனர்.
அவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, ஓரத்துார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நாகை, சட்டசபை தொகுதியில் மருத்துவ இணை இயக்குனர் தலைமையில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனையை மாற்றம் செய்ததை கண்டித்தும், மீண்டும் உயிர் காக்கும் சிகிச்சைகள் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மே 2ம் தேதி மருத்துவமனை வாயிலில், நம்பியார் நகர் மீனவர்கள் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி போலீசார் பேச்சு நடத்தியதால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நம்பியார் நகர் மீனவர்கள் தலைமையில் அரசு மருத்துவமனை வாயிலில், நேற்று 2,000த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக நிறுவனங்கள், வியாபார கடைகளும் அடைக்கப்பட்டன.
காலை 10:00 மணிக்கு துவங்கிய போராட்டம் 12:00 மணி வரை நீடித்தும் அதிகாரிகள் யாரும் பேச்சு நடத்த முன் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நகர முக்கிய வீதியில், சாலைகளில் தடுப்புகளை வைத்து தடுத்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியேற முடியாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் பதற்றமான சூழல் நிலவியது.
நிலைமை கட்டுக்குள் அடங்காமல் செல்வதை உணர்ந்த ஆர்.டி.ஓ., அரங்கநாதன், மதியம் 2:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
நாகையில் நேற்று காலை 10:00 மணி முதல் 2:00 வரை, 4 மணி நேரம் நடந்த போராட்டத்தால் நகரம் பரபரப்பாக மாறியது.