ADDED : ஜன 31, 2024 12:48 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை பணி ஒரு வாரமாக முழுவீச்சில் நடக்கிறது. கடந்த 22ம் தேதி மாவட்டத்தில் 60 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனக்கூறி காளஹஸ்திநாதபுரத்தில் கலெக்டர் மகாபாரதி கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார்.
ஆனால், இதுவரை பிறபகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
தாழஞ்சேரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து, அப்பகுதி விவசாயிகள் மயிலாடுதுறை- - மணல்மேடு சாலையில் நெல் மூடைகளை சாலையில் அடுக்கி வைத்து மறியல் நடத்தினர்.
தகவலறிந்த மணமேடு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வந்து விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.