Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வண்டியூர் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முன்வருமா அரசு?

வண்டியூர் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முன்வருமா அரசு?

வண்டியூர் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முன்வருமா அரசு?

வண்டியூர் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முன்வருமா அரசு?

ADDED : ஜூன் 11, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
வண்டியூர் கண்மாய் 687.36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 107.03 மில்லியன் கன அடிவரை தண்ணீர் தேக்க முடியும். இதன் மூலம் 963 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. மாட்டுத்தாவணி பஸ் ஸடாண்ட், பூ மார்க்கெட் போன்றவற்றால் கண்மாய் 576.36 ஏக்கர் பரப்பளவாக சுருங்கிவிட்டது. தவிர தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளும் கண்மாயை ஆக்கிரமித்துள்ளன.

கழிவுநீர் குட்டை


மதுரை இயற்கை பண்பாட்டு பேரவை உறுப்பினர் தமிழ்தாசன் கூறியதாவது:

நகர்புற விரிவாக்கத்தால் பல இயற்கை சீர்கேடுகள் நடக்கின்றன. இன்று கே.கே. நகர் பகுதியின் கழிவுநீர் வண்டியூர் நடையாளர் கழக பூங்கா வழியாக கண்மாய்க்குள் விடப்படுகிறது. பூ மார்க்கெட் ஒட்டி செல்லும் பெரியாறு பிரதான கால்வாயிலும், மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் ஒட்டிச் செல்லும் சாத்தையாறு கால்வாயிலும் நகரின் கழிவு நீரும் வண்டியூர் கண்மாயில் கலக்கிறது. சுற்றியுள்ள மருத்துவமனை கழிவு நீரும் கண்மாயில் விடப்படுகிறது.

வண்டியூர் கண்மாய் இன்று கழிவு நீர் குட்டையாக மாறிவிட்டது. கழிவு நீர் பெருக்கத்தாலும், வளர்ப்பு மீன்கள் பெருக்கத்தாலும் வண்டியூர் கண்மாயின் இயல்பான நீர் வாழ் உயிரினங்கள் அற்றுப் போய்விட்டன.

கடந்தாண்டு எங்கள் அறக்கட்டளை நிகழ்த்திய நன்னீர் மீன்கள் கணக்கெடுப்பில் 20 வகை மீன் இனங்கள் ஆவணம் செய்யப்பட்டது. அதில் 11 வகை மீன் இனங்கள் அயல் மற்றும் வளர்ப்பு மீன் இனங்கள்.

இயல் மீன் இனங்களை விட அயல் மீன் இனங்களே வண்டியூர் கண்மாயில் பரவலாக காணப்படுகிறது. இதுவரை 125 வகை பறவை இனங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. அதில் 31 வகை பறவை இனங்கள் வலசை வருபவை. வெண்கழுத்து நாரை, பாம்புத்தாரா, கூழைக்கடா, கருந்தலை அன்றில், பட்டைவால் மூக்கன் ஆகிய பறவை இனங்கள் அழிவை சந்திக்கும் அச்சுறுத்தல் பட்டியலில் உள்ளன.

பறவைகளின் வாழிடம்


வண்டியூர் கண்மாய் பாசனத்திற்கும், நிலத்தடி நீர் பெருக்கத்திற்கு மட்டும் உரிய கண்மாய் அல்ல. 125 வகை பறவை இனங்கள், குரவை, விரால், உழுவை, அயிரை, கெண்டை பொடி உள்ளிட்ட 20 வகை நன்னீர் மீன் இனங்கள், தண்ணீர் பாம்பு, பசும்நீர் பாம்பு, சாரை உள்ளிட்ட 15 வகையான பாம்பு இனங்கள், காட்டுப்பூனை, சாம்பல் நிற கீரி, இந்திய அணில், வெள்ளெலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பாலுாட்டி வகை உயிரினங்களின் வாழிடமாக விளங்குகிறது.

சாலை விரிவாக்கம், நகர் வளர்ச்சி என்ற பெயரில் பல மரங்கள் வெட்டப்பட்டும், இயற்கையாக தந்த நீர் வளங்களில் குப்பையை கொட்டியும் சீரழித்து கொண்டிருக்கிறோம்.

கண்மாய்க்குள் தீவு அமைத்தால் பறவைகள் கூடு கட்ட மரங்கள் வளரும். பல்லுயிர் பெருக்கமுள்ள வண்டியூர் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us