Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் அதிகாலையில் புகுந்து போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய கொலையாளி 'சிறை' வைக்கப்பட்ட ஏட்டு

மதுரையில் அதிகாலையில் புகுந்து போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய கொலையாளி 'சிறை' வைக்கப்பட்ட ஏட்டு

மதுரையில் அதிகாலையில் புகுந்து போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய கொலையாளி 'சிறை' வைக்கப்பட்ட ஏட்டு

மதுரையில் அதிகாலையில் புகுந்து போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய கொலையாளி 'சிறை' வைக்கப்பட்ட ஏட்டு

ADDED : ஜூன் 15, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், நேற்று அதிகாலை கொலையாளி உள்ளிட்ட இருவரால் சூறையாடப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு பால்பாண்டி உயிர்தப்பினார்.

இந்த ஸ்டேஷனில் நேற்றுமுன்தினம் இரவுப்பணியில் ஏட்டு பால்பாண்டி மட்டும் இருந்தார். நேற்றுஅதிகாலை 12:30 மணிக்கு மேல் அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் மகன் பிரபாகரன் என்ற போராளி பிரபாகரன் தனது நண்பருடன் ஸ்டேஷனிற்கு வந்தார். 'என் அப்பாவை எப்படி விசாரணைக்கு அழைத்துச்செல்லலாம்' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென கட்டையால் பால்பாண்டியை தாக்கி அறைக்குள் தள்ளி பூட்டினார். பின்னர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை இருவரும் அடித்து நொறுக்கிவிட்டு சூறையாடி தப்பிச்சென்றனர்.

ஸ்டேஷன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் பால்பாண்டியால் யாரையும் உடனடியாக அழைக்க முடியவில்லை. அவரது அலைபேசியும் நொறுக்கப்பட்டதால் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை. அதிகாலை 5:30 மணியளவில் ஸ்டேஷன் வழியே ஒருவர் 'வாக்கிங்' சென்றார். அப்போது பால்பாண்டி ஜன்னல் வழியே அழைத்து நடந்த விபரத்தை கூறினார். இதன்பிறகு கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்த ஏட்டு, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.பி., அரவிந்த் நேரில் ஆய்வு செய்து ஏட்டுவிடம் விசாரித்தார்.

3 கொலைகளில் தொடர்பு


போலீசார் கூறியதாவது:

2 ஆண்டுகளுக்கு முன்பு வி.குச்சம்பட்டி அருகில்

தொடர்ச்சி கடைசி பக்கம்

மதுரையில் அதிகாலையில்...

முதல் பக்க தொடர்ச்சி

இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் கைதானவர். 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்துள்ளார். இவரது தந்தையை வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக திண்டுக்கல் போலீசார் அழைத்துச்சென்றனர். இதை அறிந்த பிரபாகரன், மதுரை மாவட்ட போலீசார்தான் தனக்கு பதில் தந்தையை அழைத்துச்சென்றுள்ளனர் என தவறாக கருதி ஸ்டேஷனிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தலைமறைவாக உள்ள பிரபாகரனையும், நண்பரையும் கைது செய்ய டி.எஸ்.பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், பீமா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.

உதயகுமார் கைது


இதற்கிடையே சூறையாடப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட போவதாக கூறி புறப்பட்டு வந்த அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் சரவணன், தமிழரசன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணைஅமைச்சர் எல்.முருகனும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயகுமாரை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., 'போலீஸ் துறைக்கே பாதுகாப்பற்ற அவலநிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது' என்றனர்.

- பழனிசாமி

அ.தி.மு.க., பொதுச்செயலர்

போலீசுக்கே பாதுகாப்பு இல்லை

வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகுந்த மர்ம நபர்கள், காவல் நிலையத்தை தாக்கி, சூறையாடிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. என் அறிவுறுத்தலின்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, போலீசாரால் தடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களை காக்க வேண்டிய காவல் துறைக்கும் பாதுகாப்பு இல்லை; தற்போது, உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. நான்காண்டு ஆட்சி சாதனை பட்டியலில், முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான். முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது, அவருக்கு வெட்கமாக இல்லையா. காவல் நிலையத்தையே காக்க முடியாத தி.மு.க., அரசு, மக்களை காக்க வாய்ப்பே இல்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us