ADDED : மே 31, 2025 05:18 AM
என் மீது நம்பிக்கை வைத்த அஜித் ஆதிக் உருக்கம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் வரவேற்பை பெற்றது. இப்படம் 50 நாளை எட்டிய நிலையில் சென்னையில் தியேட்டர் ஒன்றில் இதற்கான விழா கொண்டாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆதிக், செய்தியாளர்களிடம் பேசும்போது ''என்னை யாரும் நம்பாதபோது என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை கொடுத்த அஜித்திற்கு நன்றி'' என்றார். அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
ஈடு செய்ய முடியாத போட்டோக்கள்: - ராஷ்மிகா
நீண்ட காலமாக காதல் கிசுகிசுவில் இருப்பவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா. சுற்றுலா சென்றாலும், ஒரே இடத்தில் இருந்தாலும் தனித்தனியாகத்தான் புகைப்படங்களைப் பதிவிடுவார்கள். இன்ஸ்டாவில் ராஷ்மிகா சில போட்டோக்களை வெளியிட்டு, “இந்த போட்டோக்கள் எல்லாம் எனக்கு பிடித்தமானவை. நிறம், சூழல், இடம், எனக்குப் புடவையை பரிசளித்த அழகான நபர், போட்டோகிராபர்... என அனைத்தும் ஈடு செய்ய முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோகிராபர் விஜய் தேவரகொண்டாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இந்த போட்டோக்கள் 2.4 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளன.
தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் குறித்து வதந்தி
தமிழ் , தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம். தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'ஹரிஹர வீரமல்லு' படத்தை தயாரித்து உள்ளார். ஜுன் 12ல் ரிலீஸாகும் இப்படத்தை இவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார். ரத்னம் சுயநினைவு இழந்துவிட்டார் என வதந்தி பரவியது. இதை மறுத்துள்ள அவரது தம்பி தயாகர ராவ், “அண்ணன் ரத்னம் பற்றி பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் தான் இருக்கிறார். இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.