ADDED : ஜூன் 11, 2025 05:41 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பகுதியில் பெரியாறு கால்வாய் பாசனத்தில் விவசாய பணி துவங்கி உள்ளது. இதில் ஒரு பகுதியாக விரைவில் இயற்கை உரம் சேர்க்கும் வகையில் விளை நிலத்தில் பயிரிடப்பட்ட தக்கை பூண்டு, சணப்பு செடிகளை விவசாயிகள் கிணற்று பாசனத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக பயிர் செய்தனர். தற்போது உழவு செய்யும் நிலைக்கு செடிகள் வளர்ந்துள்ளன.
பூக்கும் நேரத்தில் செடிகளை அப்படியே வயலில் மண்ணுக்குள் அழுத்தி டிராக்டரால் உழவு செய்கின்றனர். செடிகள் மண்ணில் புதைந்து மக்கி, பயிருக்கு மண்ணிற்கு சத்தாக மாறுகிறது. ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மண்ணிற்கு வளம் குறைவதை கட்டுப்படுத்துகிறது.
இயற்கை உரமாக மாறும் செடிகளால் மகசூல் அதிகரிக்கும். வயலில் தொடர்ந்து ரசாயன உரங்களுடன் பயிர் செய்வதால் மண்வளம் குறைகிறது. இதனால் இயற்கை உரத்திற்காக செடிகளை பயிரிட்டு உழவு பணியில் ஈடுபட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.