ADDED : ஜூலை 02, 2025 06:57 AM

விபத்தில் இருந்து கலெக்டர் மீட்ட சிறுவன் பலி
திருமங்கலம்: திருமங்கலம் அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் 50. இவரது மகன் பாலாஜி திருமங்கலம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். ஜூன் 28ல் டூவீலரில் இருவரும் திருமங்கலத்திற்கு சென்றனர். கிழவனேரி அருகே எதிரே வந்த வேன் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து ரோட்டில் கிடந்தனர். அப்போது சேடப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்காக சென்ற கலெக்டர் பிரவீன் குமார் ஆம்புலன்ஸ்காக காத்திருந்த இருவரையும் மீட்டு திட்ட அலுவலரின் காரில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வந்ததால் அவர்கள் ஆம்புலன்ஸில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி
மதுரை: புதூர் சம்பளம் வீரமுத்து. இவரது மகன் தேவ் விஷ்ணு 4. சம்பவத்தன்று அப்பகுதி கண்மாய் அருகே விளையாட சென்ற சிறுவனை நீண்ட நேரமாக காணவில்லை. அப்பகுதியினர் கண்மாயில் தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பலி
திருமங்கலம்: திருமங்கலம் அருகே சாத்தங்குடி கூலித்தொழிலாளி சூரியகுமார் 18. நேற்று முன்தினம் பன்னீர் குண்டு கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றார். காண்டை விலக்கருகே உசிலம்பட்டியில் இருந்து திருமங்கலம் வந்த டூவீலர் மோதியதில் சூரியகுமார் இறந்தார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை திருடியவர் கைது
பாலமேடு: தேவசேரியைச் சேர்ந்த கருப்பசாமி ஜூன் 29ல் வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அவரது வீட்டின் ஓடுகள் உடைக்கப்பட்டு, 23 கிராம் தங்க நகை திருடப்பட்டிருந்தது. பாலமேடு போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா உதவியால் தேவசேரி அருண் 23, கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன.