ADDED : செப் 22, 2025 03:58 AM
மதுரை : மதுரையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த நாகராஜ் 24, போக்சோ வழக்கு ஒன்றில் மதுரை கரிமேடு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். மருத்துவப்பரிசோதனை முடித்து, அவரை மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்த 2 போலீசார் ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.
கலெக்டர் அலுவலகம் அருகே ஆவணம் ஒன்றை நகல் எடுக்க ஆட்டோவை நிறுத்தியபோது, சிறுநீர் கழிக்க இறங்கிய நாகராஜ் தப்பியோடினார். இதையடுத்து ஆயுதப்படை துணை கமிஷனர் திருமலைக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மதனகலா, அழகுமுத்து, பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரித்து அப்பகுதியில் பதுங்கி இருந்தவரை கைது செய்தனர். பின் அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.