Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பல்கலை போலி கல்விச் சான்று விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

பல்கலை போலி கல்விச் சான்று விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

பல்கலை போலி கல்விச் சான்று விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

பல்கலை போலி கல்விச் சான்று விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

ADDED : அக் 23, 2025 04:11 AM


Google News
மதுரை: தமிழ்வழியில் படித்ததற்கு குரூப் 1 தேர்வு மூலம் வேலைவாய்ப்பில் சலுகை பெற சிலர் பல்கலைகளில் போலியாக பி.எஸ்.டி.எம்.,சான்று பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு:

தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. குரூப்1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி. 2020 ஜன.20ல் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். இவர்கள் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை. பள்ளிக் கல்வி முதல் கல்லுாரி வரை தமிழ்வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய இடஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.

2021 நீதிபதிகள் அமர்வு, 'தமிழ்வழியில் படித்ததற்கான சலுகை பெற மதுரை காமராஜ் பல்கலையில் சிலர் போலிச் சான்று பெற்ற விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் டி.என்.பி.எஸ்.சி.,மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

மதுரை காமராஜ் பல்கலையில் போலியாக பி.எஸ்.டி.எம்.சான்று பெற்ற 4 பேர், உதவிய பல்கலையின் 2 ஊழியர்கள், 3 தனிநபர்கள் மீது 2024 அக்.3 ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.

ஏற்கனவே விசாரணையின்போது நீதிபதிகள், 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட சில பல்கலைகளில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எஸ்.டி.எம்.,சான்று பெற்ற சிலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரிக்கு சந்தேகம் உள்ளது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட பல்கலைகள் ஒத்துழைக்க வேண்டும்,' என உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு மீண்டும் விசாரித்தது.

மதுரை காமராஜ் பல்கலை தரப்பில்,'பி.எஸ்.டி.எம்.,சான்று பெற்றவர்களில் 3 பேர் அரசு பணியில் சேர்ந்தனர். அவர்கள் முறையாக பட்டப்படிப்பு படிக்கவில்லை. அவர்களின் பட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,' என தெரிவிக்கப்பட்டது. இதுபோல் அண்ணாமலை பல்கலையில் சான்று பெற்ற ஒருவரின் பட்டம் ரத்து செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இரு பல்கலைகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரணை அதிகாரி ஆய்வு செய்து அக்.31 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us