Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சி.பி.ஐ., விசாரணை வேண்டும் அ.தி.மு.க., வலியுறுத்தல்

சி.பி.ஐ., விசாரணை வேண்டும் அ.தி.மு.க., வலியுறுத்தல்

சி.பி.ஐ., விசாரணை வேண்டும் அ.தி.மு.க., வலியுறுத்தல்

சி.பி.ஐ., விசாரணை வேண்டும் அ.தி.மு.க., வலியுறுத்தல்

ADDED : ஜூலை 01, 2025 03:49 AM


Google News
மதுரை: 'மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு முறைகேடு நடந்துள்ளதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.

மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: கமிஷனராக தினேஷ்குமார் இருந்தபோது இந்த முறைகேட்டை முதன்முதலில் வெளிக்கொண்டுவந்தது அ.தி.மு.க.,. ஆயிரக்கணக்கான வணிக கட்டடங்களுக்கு மிக குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க., வெளியிட்டது. அதன் அடிப்படையில் உதவி கமிஷனர்கள் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.

விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட பின் பில் கலெக்டர்களில் இருந்து மாநகராட்சி நடவடிக்கையை துவக்கியது. அரசியல் நெருக்கடியால் முழு விசாரணை நடக்கவில்லை. சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஓராண்டாக முன்னேற்றம் இல்லாத நிலையில் தற்போது முறைகேடு வழக்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஓய்வு உதவி கமிஷனர், தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் என்ற அளவில் தான் மத்திய குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விசாரணையும் வெளிப்படையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சியினர் தலையீடு வெளிப்படையாக நடக்கிறது.

முறைகேட்டில் தொடர்புடைய மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மீது விசாரணை நடத்தப்படவில்லை.

மக்களை ஏமாற்றும் வகையில் பெயரளவில் ஓய்வு பெற்றவர்களை கைது செய்து வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணத்தில் ஆளுங்கட்சி உள்ளது.

சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால் உண்மை தெரிய வரும். இதுகுறித்து இன்று (ஜூலை 1) முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் கமிஷனர் சித்ராவிடம் முறையிட உள்ளோம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us