/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர்நீதிமன்றம் கேள்வி அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர்நீதிமன்றம் கேள்வி
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர்நீதிமன்றம் கேள்வி
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர்நீதிமன்றம் கேள்வி
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : ஜூன் 07, 2024 11:12 PM

மதுரை: அரசுப் பள்ளிகளில் நுாலகம் மற்றும் நுாலகர்கள் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை எனில் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அதே நடைமுறையை ஏன் பின்பற்றக்கூடாது என்பதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நுாலகராக பணிபுரிந்தவர் பணி ஓய்வு பெற்றார். நுாலகராக 2019 ல் ஜெயஸ்ரீ நியமிக்கப்பட்டார். இதற்கு பள்ளி நிர்வாகம் பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்புதல் கோரியது. தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் நிராகரித்தார். அதை ரத்து செய்து ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி பள்ளி தாளாளர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
தனி நீதிபதி,'நுாலகர் பதவியில் இருப்பவர் ஓய்வு பெறும்போது அல்லது பதவி உயர்வு பெறும்போது, அப்பணியிடம் காலாவதியாகிவிடும். அரசிடம் பணியிடத்தை ஒப்படைக்க வேண்டும். புதிய நுாலகரை நியமிக்க நிர்வாகத்திற்கு அனுமதி இல்லை. இது அரசாணையில் உள்ளது.
மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாளாளர் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: உதவி பெறும் தனியார் பள்ளிகளில் நுாலகர், நுாலக உதவியாளர் பணி ஓய்வு அல்லது இடமாற்றம் அல்லது பதவி உயர்வு பெற்றால் அப்பணியிடம் நீக்கப்படும். இது பள்ளிக் கல்வித்துறையின் (2018) அரசாணையில் உள்ளது. மனுதாரர் பள்ளி ஒப்புதல் கோருவது விதிகளுக்கு எதிரானது. இதனால் ஒப்புதல் மறுக்கப்பட்டது. இதை தனி நீதிபதி உறுதி செய்துள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் நிலைப்பாடு இத்தகையதாக இருந்தால், இந்நீதிமன்றத்தின் மனதில் கீழ்க்கண்ட கேள்விகள் எழுகிறது.
இனிமேல் மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் நுாலகம் இருக்காது என்பது தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை முடிவாக உள்ளதா, எந்த அரசுப் பள்ளியிலும் நுாலகம் கூடாது என்பது மாநில அரசின் கொள்கை முடிவாக இருந்தால், இன்னும் பல லட்சம் மாணவர்கள் அவற்றை நம்பி படித்து வருகின்றனர். அவர்களின் அறிவு மேம்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இச்சூழலில் நுாலகம் அவசியமா அல்லது இல்லையா.
அரசுப் பள்ளிகளில் நுாலகங்கள் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருந்தால், நுாலகர் மற்றும் நுாலக உதவியாளர் இல்லாமல் நுாலகங்களை நடத்த முடியுமா.
அரசுப் பள்ளிகளில் நுாலகம் மற்றும் நுாலகர்கள் அல்லது நுாலக உதவியாளர்கள் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அதே நடைமுறையை ஏன் பின்பற்றக்கூடாது என்பதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜூன் 13 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.