போலி குடிநீர் ஆலைகள் கலெக்டரிடம் மனு
போலி குடிநீர் ஆலைகள் கலெக்டரிடம் மனு
போலி குடிநீர் ஆலைகள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 30, 2024 02:06 AM
மதுரை: 'மதுரை மாவட்டத்தில் வாகனங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநல அலுவலர் சங்கீதா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் 11 பேருக்கு வங்கிக்கடன் மானியம் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டி அலுவலர் வெங்கட்சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
தி.மு.க., கவுன்சிலர் ஜெயராம் அளித்த மனு: பெருங்காமநல்லுாரில் சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு, மதுரை ஆரப்பாளையம் ரோடு - மேலப்பொன்னகரம் ரோடு சந்திப்பில் நினைவுத்துாண் நிறுவ அனுமதிக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, பல துறைகளில் தடையில்லா சான்று பெற்றும், ஆர்.டி.ஓ., நினைவுத்துாண் அமைக்க அனுமதிக்காதது போல பதில் கூறியுள்ளார்.
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளதால் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். எனவே வேறு இடம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூகஆர்வலர் சரவணன் மனுவில், ''அரசின் அனைத்துத்துறை அலுவலகங்களிலும் உள்ள காலியிடங்களை உயர்நிலை முதல் கடைநிலை ஊழியர் வரையான பணியிடங்களை பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
பரவை சந்திரசேகரன் மனுவில், ''மாவட்டம் முழுவதும் லாரிகளில் குடிநீர் குடம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது.
இதற்கு உணவுப் பாதுகாப்பு, சுகாதார துறை அனுமதி வழங்குவதில்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மூடி முத்திரையிட்ட, தயாரிப்பு நாள், நிறுவனம், விலை, காலாவதி நாள் என குறிப்பிட்டு விற்க வேண்டும் என விதிஉள்ளது.
வாகனங்களில் கொள்கலன் சுத்தம் செய்யப்படுவதில்லை. பல போலி ஆலைகள் இயங்கி வருகின்றன.
இவற்றை மாவட்ட நிர்வாகம் தடை செய்வதுடன், போலி ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.