/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை பூங்காக்களில் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் மதுரை பூங்காக்களில் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை பூங்காக்களில் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை பூங்காக்களில் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை பூங்காக்களில் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஜூலை 11, 2024 05:33 AM

மதுரை: மதுரையிலுள்ள 199 பூங்காக்களில் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் பொழிலன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கே.கே.நகரில் ஏ.ஆர்., நினைவு சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. விழாக்கள் நடத்துகின்றனர். சமையல் செய்கின்றனர். அனுமதியின்றி ஒலி பெருக்கி பயன்படுத்துகின்றனர்.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் குவிக்கப்படுகின்றன. சிறுவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும். பூங்காவை மேம்படுத்த மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்போது நீதிபதிகள் அமர்வு: மாநகராட்சி கமிஷனர் பூங்காவை ஆய்வு செய்ய வேண்டும். அதை பழைய நிலைக்கு கொண்டுவர எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.
மாநகராட்சி தரப்பு: பூங்காவில் ஓராண்டிற்கு முன் குடியிருப்போர் சங்க கூட்டம் நடந்தது. உணவு கழிவுகளை அகற்றாமல் சென்றுவிட்டனர். தற்போது அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் எதுவும் இல்லை. புத்தகங்கள் வாசிப்பதற்கான அறை, கழிப்பறை, சூரிய மின்சக்தி வசதி செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள் நிறுவப்படும். சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தது.
நீதிபதிகள்: இந்நீதிமன்ற உத்தரவிற்கு பின் மாநகராட்சி நிர்வாகம் சில நடவடிக்கைளை எடுத்துள்ளது. அனுமதியற்ற, தேவையற்ற கட்டுமானங்களை அகற்ற வேண்டும். பூங்காவை பழைய நிலைக்கு கொண்டுவர மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏ.ஆர்.பூங்காவை காலை 6:00 முதல் 9:00 மணிவரை, மாலை 4:30 முதல் இரவு 8:30 மணிவரை மட்டும் திறந்து வைத்திருக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 199 பூங்காக்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்தி, பழைய நிலைக்கு கொண்டுவர 2022 ல் இந்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. அதன்படி எத்தகைய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அப்பூங்காக்களின் பட்டியல், அவை எந்தெந்த மண்டலங்களில் உள்ளன, அவற்றிற்கு பொறுப்பான அலுவலர்கள் யார், என்னென்ன வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன விபரங்களை ஜூலை 24 ல் மாநகராட்சி கமிஷனர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.