Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.10,000 கடனை திருப்பி கேட்டு திட்டியதால் தாய், மகளை கொன்ற மூன்று கொடூரர்கள் கைது

ரூ.10,000 கடனை திருப்பி கேட்டு திட்டியதால் தாய், மகளை கொன்ற மூன்று கொடூரர்கள் கைது

ரூ.10,000 கடனை திருப்பி கேட்டு திட்டியதால் தாய், மகளை கொன்ற மூன்று கொடூரர்கள் கைது

ரூ.10,000 கடனை திருப்பி கேட்டு திட்டியதால் தாய், மகளை கொன்ற மூன்று கொடூரர்கள் கைது

ADDED : செப் 30, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
கிருஷ்ணகிரி : கொடுக்கல் வாங்கல் தகராறில் தாய், மகளை கத்தியால் கழுத்தறுத்து கொன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர், யாசின் நகரை சேர்ந்தவர் எல்லம்மாள், 50. கணவரை இழந்த இவர், தன், 13 வயது மகள் சுசிதா, 16 வயது மகன் பெரியசாமி ஆகியோருடன் வசித்தார்.

தனிப்படைகள்


பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். செப்., 26ல் வீட்டிலிருந்த எல்லம்மாள், அவரது மகள் சுசிதா இருவரும் கழுத்தறுத்து கொல்லப்பட்டனர். பெரியசாமி அப்போது வீட்டில் இல்லை.

இக்கொலையில் கிருஷ்ணகிரி போலீசார், தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.

இதில், காவேரிப்பட்டணம் அடுத்த குரும்பட்டி மோட்டூரை சேர்ந்த நவீன்குமார், 23, அதே பகுதியை சேர்ந்த சத்தியரசு, 24 மற்றும், 17 வயது சிறுவன் ஆகிய மூவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிந்து, அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

நவீன்குமார் பிக்கப்வேன் டிரைவர். இவர், பிரியங்கா என்பவரை ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் செய்தார்.

தன் நண்பரான சத்தியரசுவுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் எல்லம்மாளிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அப்பணத்தை திருப்பிக் கொடுக்காததால், சத்தியரசு, நவீன்குமாரை, எல்லம்மாள் கடுமையாக திட்டியுள்ளார்.

பல்வேறு கோணங்கள்

இதில், ஆத்திரமடைந்த நவீன்குமார், சத்தியரசு, 17 வயது சிறுவனுடன் சேர்ந்து, எல்லம்மாளை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். செப்., 25 இரவு ஆயுதங்களுடன் வந்த அவர்கள், எல்லம்மாள் வீட்டின் கதவை தட்டியும், அவர்கள் கதவை திறக்கவில்லை.

இதனால், 26ம் தேதி மதியம், 3:00 மணியளவில் எல்லம்மாள் வீட்டிற்கு பணத்தை திருப்பி கொடுப்பது போல் மூவரும் சென்றுள்ளனர். அப்போது, நவீன்குமார், சிறுமி வாயை பொத்திக்கொள்ள, 17 வயது சிறுவன் எல்லம்மாள் காலை பிடித்துக் கொள்ள, இருவரையும் சத்தியரசு கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

அதன் பின், வீட்டிலிருந்த வாஷ் பேஷனிலேயே கைகளை கழுவிய அவர்கள், எல்லம்மாளிடமிருந்த, 10 பவுன் நகை மற்றும், 50,000 ரூபாயை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் வழியாக சென்றுள்ளனர்.

அவர்கள் எடுத்து சென்ற நகைகளில், ஒரு நகையை மட்டும் அடகு வைத்து, 2.30 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர். மொபைல் போன் சிக்னல், 'சிசிடிவி' காட்சிகள் மற்றும் பல்வேறு கோணங்களில் விசாரித்ததில் மூவரும் சிக்கினர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us