Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாங்கூழ் தொழிலதிபர்களிடம் கையேந்தும் நிலை மா விவசாயிக‍ளை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

மாங்கூழ் தொழிலதிபர்களிடம் கையேந்தும் நிலை மா விவசாயிக‍ளை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

மாங்கூழ் தொழிலதிபர்களிடம் கையேந்தும் நிலை மா விவசாயிக‍ளை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

மாங்கூழ் தொழிலதிபர்களிடம் கையேந்தும் நிலை மா விவசாயிக‍ளை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

ADDED : மே 30, 2025 01:33 AM


Google News
கிருஷ்ணகிரி, 'மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்களிடம், கூடுதல் விலை கேட்டு, மா விவசாயிகளை கையேந்தும் நிலைக்கு, தமிழக அரசு தள்ளி விட்டுள்ளது' என, மா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு செயலாளர் சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கூழ் மற்றும் மாங்கனிகள் ஏற்றுமதியால், அதிகளவில் அந்நிய செலாவணி கிடைக்கிறது. எனவே, மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அதில் தவறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் தரும் தோட்டப்பயிரான மா சாகுபடி கடந்த, 5 ஆண்டுகளாக பாதித்துள்ளது.

கடந்தாண்டு கடும் வெப்பத்தால், மகசூல் முழுமையாக பாதித்தது. மா மரங்களும் காய்ந்தன. தொடர் பாதிப்பால், மா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. இதனால், அரசு நிவாரணம் வழங்க, மா விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்திருந்தது. பாதிக்கப்பட்ட மா விவசாயிகளின் விபரங்களை பெற்று, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது. ஆனால், இதுநாள் வரை நிவாரணம் வழங்கவில்லை.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், மா விவசாயிகளை பாதுகாக்க, ஒரு கிலோவிற்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதேபோல், இங்குள்ள மா விவசாயிகளுக்கும், தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, அரசின் காதுகளுக்கு எட்டவில்லை.

தமிழக அரசு உழவர் நலத்துறையின் நிதி நிலை அறிக்கையில், நான்காவது ஆண்டாக, மா சாகுபடி பற்றி ஒரு வரிகூட இல்லாமல் தாக்கல் செய்யப்படுகிறது. உழவர் நலத்துறை அமைச்சர், மா விவசாயிகளை பாதுகாக்காமல் அலட்சியப்படுத்தி வருவதே, வழக்கமாக உள்ளது. மா சாகுபடியையும், பாதிக்கப்பட்ட மா விவசாயிகளையும் பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கலெக்டர் தலைமையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில், மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்கள், மா கிலோ ஒன்றுக்கு, 12 ரூபாய் வழங்குவதாக அறிவித்தனர். அதை செயல்படுத்த வேண்டும்.

கடந்த, 5 ஆண்டுகளாக, மா விவசாயிகளை மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்களிடம், மாவிற்கு கூடுதல் விலை கேட்டு, கையேந்தும் நிலைக்கு, தமிழக அரசு எங்களை தள்ளி விட்டது. எனவே இனியும், மா விவசாயிகளை புண்படுத்தாமல் பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us