Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புதிய திட்டங்கள் துவக்காததால் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்கும் ஓசூர்

புதிய திட்டங்கள் துவக்காததால் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்கும் ஓசூர்

புதிய திட்டங்கள் துவக்காததால் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்கும் ஓசூர்

புதிய திட்டங்கள் துவக்காததால் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்கும் ஓசூர்

ADDED : டிச 02, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
ஓசூர் தமிழக எல்லையிலுள்ள ஓசூர் நகரம், தொழில் நிறுவனங்களின் வருகையால் வேகமாக வளர்ந்து வருகிறது. அத்தியாவசிய தேவைக்காக, ஓசூர் நகருக்குள் பல கிராமங்களிலிருந்து மக்கள் வந்து செல்கின்றனர். அதனால், நகருக்குள் உள்ளூர் போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஓசூர் நகரை சுற்றி சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு, தர்மபுரி அதியமான்கோட்டை - நெரலுார் சாலை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், நகர் பகுதிக்குள் உள்ள உள்ளூர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. நகர் பகுதியின் முக்கிய சந்திப்புகளில், சிக்னல்கள் கூட செயல்படாமல் இருப்பதால், தாறுமாறாக வாகனங்கள் சென்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

கிடப்பில் திட்டம்

ஓசூரில், 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை குறைக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. குறிப்பாக, ஜூஜூவாடியிலிருந்து, பேரண்டப்பள்ளி வரை அவுட்டர் ரிங்ரோடு அமைக்க, 320 கோடி ரூபாயை, தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். இச்சாலையில் வரும், 11 கிராமங்களில், 6 கிராமங்களில் நில எடுப்பு பணி முடிந்து விட்டது. 5 கிராமங்களில் நில எடுப்பு பணிகள் முடியாததால், இச்சாலை திட்டம் கிடப்பில் உள்ளது. அதனால், நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை. ஓசூர் வழியாக செல்லும் பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் தர்மபுரி - நெரலுார் சாலையை இணைக்க, புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. பத்தலப்பள்ளியிலிருந்து ராயக்கோட்டை சாலையிலுள்ள புதிய அரசு மருத்துவமனை வழியாக கெலமங்கலம் சாலை வரை, 138 கோடி ரூபாயில், புதிய ரிங்ரோடு அமைக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

பவானி பேலஸ் மண்டபம் முதல், தனியார் கூரியர் நிறுவனம் வரை, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு கிடப்பில் உள்ளது. தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க, வரைபட அனுமதியை தராமல், தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் இழுத்தடிக்கிறது. இதுபோன்ற பல சாலை மற்றும் பால திட்டங்களை செயல்படுத்தாமல் இழுத்தடிப்பதால், நாளுக்கு நாள் நகரின் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

ஆக்கிரமிப்பு கடைகள்

மேலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, தெருவோர வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும். இல்லாவிட்டால், பெங்களூரு நகர் போல், ஓசூரும் போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து. வேலை, மருத்துவம் போன்றவற்றுக்கு செல்லும் மக்கள் நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருக்கும் அவல நிலை உருவாகும். எனவே, தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, தேவையான திட்டங்களை ஓசூருக்கு வழங்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us