ADDED : ஜூன் 17, 2024 01:43 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், அரியவகை உயிரினமான காட்டுப்பூனைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுப்பூனை ஒன்று, முத்தம்பட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்றது.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி காட்டுப்பூனை உயிரிழந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற மக்கள் காட்டுப்பூனை இறந்து கிடப்பதை பார்த்து, ராயக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதை எடுத்து சென்று, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர். இறந்த காட்டுப்பூனைக்கு, 3 வயது இருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.