ADDED : ஜூன் 06, 2024 04:05 AM
அரூர்: அரூர் பகுதியில், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: அரூரில், கடந்த, 4 நாட்களுக்கு முன், 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 700 முதல், 800 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல், மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து, ஒரு கூடை தக்காளி, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர் மழையால், வயல்களில் உள்ள செடிகளில் தக்காளி அழுகி வருகிறது. இதனால் அரூரிலுள்ள, தனியார் மண்டிகளுக்கு தக்காளி வரத்து பெருமளவு சரிந்துள்ளது. மேலும், திருமணம், சுபநிகழ்ச்சிகளால், தக்காளி தேவை அதிகரித்துள்ளதுடன், வெளிமாவட்டங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.