ADDED : ஜன 11, 2024 11:36 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., கோட்டமேடு தேவேந்திர தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 30, எ,க்ட்ரீஷியன். இவர் நடுவதியம் கிராமத்தை சேர்ந்த கமலா, 27, என்பவரை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் மது குடித்து வருவதால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த கணவரை, கமலா தடுத்து அறிவுரை கூறியதால், தகராறு செய்தார். கணவரிடம் பயந்து கொண்டு வீட்டைவிட்டு இரவு வெளியே சென்றவர், அதிகாலை குளித்தலை ரயில் நிலையம் அருகில் இரட்டை கைக்காட்டியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில் முன் பாய்ந்து மனைவி தற்கொலை செய்து கொண்டதையறிந்த ஆனந்தகுமார், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆவதால், குளித்தலை ஆர்.டி.ஓ., விசாரணை செய்ய போலீசார் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளனர்.
பெண்ணின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அரசு மருத்துவமனையில் முற்றுகையில் ஈடுபட்டனர். குளித்தலை இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.