பொங்கல் தொகுப்பு அறிவிப்பு எப்போது?
பொங்கல் தொகுப்பு அறிவிப்பு எப்போது?
பொங்கல் தொகுப்பு அறிவிப்பு எப்போது?
ADDED : ஜன 01, 2024 11:40 AM
கரூர்: 'பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்' என்ற எதிர்பார்ப்பில் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா வரும், 14ல் போகியுடன் தொடங்குகிறது. ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழக அரசு பொங்கல் பரிசை வழங்கி வருகிறது. அதில், பச்சரிசி, சர்க்கரை, நெய் மற்றும் கரும்பு துண்டு வழங்கப்படும்.
அதற்காக, தமிழகத்தில் உள்ள விவசாயிகள், பொங்கல் திருவிழாவையொட்டி, செங்கரும்புகளை பயிரிடுவது வழக்கம். நடப்பாண்டும், மாநிலம் முழுவதும், பொங்கல் திருவிழாவையொட்டி, செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், பொங்கல் திருவிழாவுக்கு இன்னும், 13 நாட்கள் உள்ள நிலையில், பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள், தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, கரும்பு விவசாயிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை கணக்கில் கொண்டும், பொங்கல் பரிசை கணக்கில் கொண்டும், 12 மாத பயிரான கரும்பு சாகுபடி தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காவிரியாறு பாயும் மாவட்டங்களில், செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை கரும்பு முதல் வெட்டுக்கூலி வரை, ஒரு ஏக்கருக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும். 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 400 ரூபாய் முதல், 500 ரூபாய்க்கு விற்பனை செய்தால் தான், ஓரளவுக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். பெரும்பாலும், தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை நம்பியே, செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்படும் அனைத்து செங்கரும்பையும், பொதுமக்களுக்கு நேரிடையாக விற்பனை செய்ய முடியாது. மொத்த வியாபாரிகள் பொங்கலுக்காக வாங்கி செல்வர். தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகாததால், மொத்த வியாபாரிகளும் வரவில்லை. கூட்டுறவு துறை அதிகாரிகள், செங்கரும்பு சாகுபடி குறித்து, கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதனால், கரும்பு துண்டுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை, தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொங்கல் பரிசு அறிவிப்பு தாமதம் குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் பணிகளில், அரசு உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம், தொடர்பில் இருக்கிறோம். இன்னும், இரண்டொரு நாளில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புண்டு. அதன்பின், கடந்தாண்டை போல செங்கரும்பை, விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக பெறும் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.