Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணை இல்லை

அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணை இல்லை

அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணை இல்லை

அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணை இல்லை

ADDED : அக் 13, 2025 05:44 AM


Google News
கரூர்: அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது, அதை சேமித்து வைக்க, கரூர் மாவட்டத்தின், ஆற்றுப்பகுதியில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள, அமராவதி அணை நீர்மட்டம், 90 அடியாகும். கேரளா மாநிலம் மற்றும் உப நதிகளான சண்முகா நதி, குதிரை ஆறு, உப்பாறு போன்ற பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, அமராவதி அணைக்கு நீர் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை, புயல் காரணமாக, அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அப்போது, ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படும்.ஆனால், கரூர் மாவட்ட அமராவதி ஆற்றுப்பகுதிகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளம் ஏற்படும் போது, உபரி நீர் திருமுக்கூடலுார் பகுதியில், காவிரியாற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதியில், தடுப்பணைகளை கட்ட வேண்டும், கிளை வாய்க்கால்களை முழுவதுமாக துார்வார வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட அமராவதி ஆற்றுப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது, குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால், வறட்சியான காலங்களில் அமராவதி ஆற்றுப்பாசன விவசாயி களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் உயர்ந்தால், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தீவன பயிர் சாகுபடி செய்ய வசதியாக இருக்கும்.

இதற்கு ஒரே தீர்வு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் தடுப்பணைகளை கட்டுவதுதான் சிறந்தது. உபரி நீர் செல்லும்போது, கடலில் கலக்க விடாமல் தடுப்பணைகளில் சேமிக்க முடியும். அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதை பயன்படுத்தி, விவசாயிகள் வறட்சி காலங்களை சமாளிக்கலாம்.

பல ஆண்டு கோரிக்கைக்கு பின், அமராவதி ஆற்றின் குறுக்கே, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது, பெரிய ஆண்டாங்கோவிலில் தடுப்பணை கட்டியுள்ளனர். அதேபோல், ராஜபுரம், கோயம்பள்ளி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், கூடுதலாக தடுப்பணைகளை புதிதாக கட்ட வேண்டும்.

போதிய தடுப்பணைகள் இல்லாததால், கடந்த, மூன்று மாத காலமாக அமராவதி ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வீணாக காவிரியாற்றின் வழியாக கடலுக்கு செல்வது அதிர்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us